வெள்ளி, 30 டிசம்பர், 2022

கட்டுவன்

 



குட்டுவன் கடலைத்தாண்டி

இராவண தேசம் கண்டு
கட்டினன் தனக்கேயாங்கு
தனித்துவப் பண்பு மேவ
மண்வளம் செழிக்க நாளும்
சிந்தினன் வியர்வைதன்னை
பெற்றனன் விருத்தியூராம்
பெருமைகள் சூழக்கண்டு
குட்டுவனூர் மருவியாங்கு
கட்டுவனாம் மாற்றங்கண்டு
பல்கலைகள் பயின்றேநாளாய்
புத்துயிரும் பெறமின் சீரே
மயிலையும் குப்பிளான் சூழ
தெல்லியூர் குரும்பையூர் ஈறாய்
புன்னாலை தொடவேநோக்க
மல்லாகம் புறத்தேயாமே
கரண்டையின் ஐயன் காக்க
மருதடித் துதிக்கை பற்றி
வானமே எல்லையுமாக்கி
பெற்றனன் இறைநல் ஆசி
பத்திரன் வீரன் நிற்க
காப்பவன் வைரவன் நோக்க
உயருகை அவற்றேயாகி
உதித்தது அரும்பொற் சாதி
விசுவநாத புலவோன் பெரியோன்
ஆக்கிய ஆட்டம் கூப்பி
நெடுதிடும் ஆடவர்மேலாய்
அதிர்ந்த நல்வசந்தன் கூத்து
ஆதிய நன்னிலமே மாறி
காத்தவன் கண்ணயர் தருணம்
ஓட்டினன் ஊரை நிசியில்
மறைந்தன ஊரவனுறக்கம்
பட்டவை விழலேயாகி
உதிரமும் உறையக் கூர்வாள்
குத்தியே இதயம் வெம்பி
கிளம்பினன் இலட்சியம் விலக
தன்னிறை பொருள்சேராங்கே
திமிரவன் கட்டுவனூரான்
மற்றவன் தயத்தே ஒடுங்க
நித்தமும் விழிநீர் மல்கி
சிரந்தாழ் நிலையில்நாளும்
தன்னவன் நம்பியவெண்ணம்
மீண்டுமோர் பிறப்பைச்செய்தான்
கட்டுவனை கட்டிக்காத்தான்
விடியலின் வெளிச்சம்தன்னில்
ஊரது நிழலும் காண
புயலென நகர்ந்தான் மீண்டு
புதியதோர் உலகம் செய்வான்
கட்டுவன் துளிர்க்கும் இந்நாள்
உதடுகள் மலரக்கண்டு
மாறிய பொன்னாள் ஏனோ
உள்ளகம் குளிரல் காணேல்
பாட்டனவன் கையை பற்றி
பாரிதோ உன் ஊர்மொழிய
பாட்டனும் உயிரோடில்லை
கட்டியவன் கல் வீடில்லை
வளமாரி வளமும் மிதமே
மும்மாரி பொழிவும் நிதமே
சிவக் கொழுந்தன்னான் இல்லா
ஊரது எனக்கினியன்றே
விளக்கம்:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குட்டுவர் என்கிற திராவிட ஆதிக்குடியொன்று கடல்தாண்டி வந்து இராவண தேசமென்று சொல்லப்படுகின்ற இலங்கையில் தனக்கென ஒரு வதிவிடத்தை உருவாக்கிக்கொள்கிறது. தன்னுடைய அயராத உழைப்பினால் மண்வளத்தின் செழுமையை ஆதாரமாய்க் கொண்டு தன்னுடைய ஊரை அந்தக் குடியினர் விருத்தியடையச் செய்கின்றனர். காலங்கள் உருண்டோட அந்தக் குட்டுவர் வாழ்ந்த குட்டுவனூர் என்ற இடத்தின் பெயர் மருவிக் “கட்டுவன்” ஆகியது. தொடர்ந்து அந்த வம்சமும் பெருகி அம்மக்கள் பல கலைகளையும் பயின்று கட்டுவனுக்கு புத்துயிர் வழங்கத் தொடங்கினர். மயிலிட்டி, குப்பிளான், தெல்லிப்பளை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன், மல்லாகம் போன்ற அயற் கிராமங்களைக் கொண்டு கட்டுவனின் அமைவிடம் அமைந்தது. கரண்டை ஐயப்பனதும், மருதடி விநாயகரதும் இறையாசிகளை வானளாவப் பெற்றதுமட்டுமின்றி வீரபத்திரரும், காக்கும் கடவுளாம் வைரவரும் வீற்றிருக்கும் அவ்வூருக்கு இறைவிருத்தியும் சேரச் சேர அவ்வூரவரின் வாழ்க்கைத் தராதரமும் அதுவாகவே வளர்ந்தது.
அவ்வூரின் அரும்பெருஞ் சொத்தெனப் போற்றப்படும் 17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஸ்வநாதர் என்கிற புலவர் (அவருடைய ஆறாவது பரம்பரை வாரிசு நானாம்) எழுதிய வசந்தன் நாடகம் அவ்வூரின் கடும் உடலுழைப்பினால் கட்டுறுதிமிக்க தேகம் கொண்ட ஆண்களினால் இசையோடு தாளலயப் பாணியில் ஆடப்பட்டு அந்தக் கிராமத்தின் பண்பாடுகள் இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றன.
இவ்வாறான தொன்மைமிக்க வரலாறு கொண்ட அந்த ஊரின் கடவுள் சற்றே கண்ணயர்ந்த வேளையில் அந்த ஊரின் தூக்கம் கெட்டது. அந்தச் சமுதாயம் சிறுகச் சிறுக வளர்த்துவந்த ஒரு சாம்ராச்சியமே ஆட்டம் காணும்படியாக அவ்வூரின் மக்கள் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உடலின் இரத்தம் உறைந்துபோக முன்னர் கூரிய வாளொன்றினால் இதயத்தைப் பதம்பார்ப்பது போன்ற வலியை கட்டுவனின் குடியினர் உணரலாயினர். தமக்குத் தேவையானதைத் தாமே உருவாக்கி அடுத்தவன் நிழலில் வாழாத தன்னிறைவு நிலையில் வாழ்ந்த “திமிருள்ளவன்” என்கிற பதத்துக்குரிய கட்டுவன் வாழ்மக்கள் தலைதாழ்ந்து மற்றவனின் தயவுடன் வாழவேண்டிய வேதனைமிக்க ஒரு இக்கட்டுக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆனாலும் தைரியமிக்க கட்டுவனானின் நம்பிக்கை தளரவில்லை. முப்பது ஆண்டுகள் கழித்து ஓர் விடியல் பிறந்தது. கட்டுவனில் மீண்டும் அவன் கால் தடம் பதிந்தது. ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். அனைவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி ஆரவாரம். கட்டுவன் மீண்டும் அவர்களுக்கே உரித்தானது. ஆனால் இந்த மீள்குடியேற்றம் என்னைமட்டும் ஏனோ மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. காரணம், என் பாட்டன் வாழ்ந்த இடம்தான் எனக்குக் கட்டுவன். “எங்களுடைய ஊரை மீண்டும் பாருங்கள் அப்பப்பா” என்று மீளக்குடியமரும் வேளையில் அவரின் கையைத் தொட்டுக்கூற என் பாட்டன் இன்று உயிரோடில்லை. அவர் கட்டிய வீடும் இன்று அங்கில்லை. வளமாரி வைரவர் இருக்கிறார் என்பதற்காகவோ… மும்மாரியும் பொழிந்து வளம் கொழிக்கும் ஊராக இருக்கிறதே என்பதற்காகவோ என் பாட்டன் சிவக்கொழுந்தர் இல்லாத அந்த ஊரை என்னால் நேசிக்க முடியவில்லையே என்று வருந்தி நிற்பதைக் கூறுகிறது இவ்வரிகள்.
ரஞ்சித் தவா
(சிவக்கொழுந்தரின் பேரன்)
கட்டுவன்

புதன், 28 டிசம்பர், 2022

மதப் புராணம்

 

சிலப்பதிகாரம் ,
மணிமேகலை,
சீவக சிந்தாமணி,
வளையாபதி ,
குண்டலகேசி
பௌத்த காவியம்
பெரியபுராணம்,
கந்தபுராணம்,
திருவிளையாடல்
சைவ சமயம் காவியம் .
கம்பராமாயணமும் ,
வில்லிபாரதமும்
வைணவ காவியம்
தேம்பாவணி,
இரட்சணிய யாத்திரிகம்,
இரட்சணிய மனோகரம்,
இயேசு காவியம்
சீறாப்புராணம்
இசுலாமியக் காவியம்

துயரம் ஒன்று நேரும் என உணர்த்தும் பகுதி,
உள்ளவாறு வருணிக்கப்படுகிறது.
மனிதனை ஆழ்வதற்கு

அரசியல்சாரா அறிவுஜீவி: ஓட்டோ ரெனே காஸ்டில்லோவின் ஒரு கவிதை



ஒரு நாள்
என் நாட்டின்
அரசியல்சாரா அறிவுஜீவிகள்
எளிய எம் மக்களால்
விசாரனை செய்யப்படுவார்கள்.
அவர்கள்
தங்கள் தேசம்
மெல்ல மெல்ல
இறந்து கொண்டிருந்த பொழுது
என்ன செய்து கொண்டிருந்தார்கள் என
கேள்வி கேட்கப்படுவார்கள்.
யாரும்
அவர்களுடைய உடைகளைப் பற்றியோ
கனமான மதிய உணவிற்குப் பிறகான
நீண்ட துாக்கத்தைப் பற்றியோ
கேட்கப் போவதில்லை,
யாரும்
அவர்களுடைய “சூன்யத்தைப் பற்றிய கருத்துக்கள்”
குறித்த மலட்டு விவாதங்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பப் போவதில்லை,
யாரும்
அவர்களுடைய உயர் பொருளாதார வாசிப்பு குறித்து
கவலைப்படப் போவதில்லை.
அவர்கள் இவர்களிடம்
கிரேக்கப் புராணங்கள் குறித்தோ
அல்லது அவர்களிடையே
இறந்து போன கோழைகளின் மரணம் குறித்த
சுய பச்சாதாபங்களை குறித்தோ
கேள்வி கேட்கப் போவதில்லை.
அவர்கள்
இவர்களின் மொத்த பொய்யின் நிழலில் பிறந்த
வறட்டு நியாயங்கள் எதைப்பற்றியும் கேட்கப் போவதில்லை.
அந்த நாள்
எளிய மனிதர்கள் வருவார்கள்.
அவர்கள்
இந்த அரசியல்சாரா அறிவுஜீவகளின்
புத்தகங்களிலோ கவிதைகளிலோ
எந்த இடமும் இல்லாதவர்கள்,
ஆனால் தினம்தோறும்
இவர்களுடைய
ரொட்டியையும் பாலையும்,
சப்பாத்தியையும் முட்டையையும்
விநியோகிப்பவர்கள்.
அவர்களின் வாகனங்களை ஓட்டுபவர்கள்,
இவர்களுடைய நாய்களையும் தோட்டங்களையும்
பராமரிப்பவர்கள்
இவர்களுக்காக வேலை செய்பவர்கள்,
அவர்கள் கேட்பார்கள்:
“உங்களுடைய கனிவும், பண்பும், இரக்கமும்
எங்கே எரிந்து போயின
ஏழைகள் துன்புற்றுக் கொண்டிருந்த பொழுது
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”
என் இனிய நாட்டின்
அரசியல்சாரா அறிவுஜீவிகளே
உங்களால் பதில் கூற முடியாது.
உங்கள் தைரியத்தை
பினம்திண்ணி கழுகைப் போன்ற
உங்கள் மௌனம் தின்று தீர்க்கும்.
உங்களின் சொந்த விரக்தி
உங்கள் ஆத்மாவை ஆக்கிரமிக்கும்.
நீங்கள் அவமானத்தால் விக்கித்து நிற்பீர்கள்.

வள்ளுவனும் /கிராமத்தானும்

 



"சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்"

-திருக்குறள் -664(வினைத் திட்பம்)

கிராமிய கவிதை பாணியில் உரை :

இருக்கணும் இருக்கணும்
தெடமா இருக்கணும்,
எந்தச் செயலையும் செய்யிறதில
தெடமா இருக்கணும்..

இந்தச் செயல
இப்புடி இப்புடி செய்வேண்ணு
சொல்லுறது ரெம்ப லேசு,
சொன்னபடி அதச்
செய்யத் தொடங்கி காலத்தில
செய்து முடிக்கிறது
கடினமான காரியந்தான்..

அதால
இருக்கணும் இருக்கணும்
தெடமா இருக்கணும்,
எந்தச் செயலையும் செய்யிறதில
தெடமா இருக்கணும்…!

புதன், 7 டிசம்பர், 2022

தல்ஸ்தோயின் ஆதித்தேடல்

https://images-na.ssl-images-amazon.com/images/I/A1uTmmPSQ2L.jpg



 ஓருயர்ந்த ஒப்பற்ற படைப்பாளிக்கும்கூட வாழ்க்கை அர்த்தப்படாதது வியப்புதான். தல்ஸ்தோயின் ‘வாக்குமூலம்’ அவரது சொந்த மெய்ஞானத் தேடலின் தடங்கள் நமக்கு உரைப்பதென்ன என்ற ஆர்வம் மேலிட டேவிட் பாட்டர்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது.  மரபுவழி கிறிஸ்துவத்தில் திரித்துவ நம்பிக்கையைக் கொண்டிருந்தார் தல்ஸ்தோய். 1879ல் கீவ் நகரிலிருந்த குகை மடங்களில் தங்கியிருந்த ஆதிகிறிஸ்துவ வழியில் வசித்துவந்த துறவிகளின் எளிய வாழ்முறையோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

ஆகமங்களின்படி தேவாலயங்கள் நடத்தப்படவில்லை என்பதை அறிந்து மதம்சார்ந்த பற்றுகளைக் கைவிட்டார். அதன் சட்டதிட்டங்களைச் சாடினார். எல்லையற்றதை அனுபூதியாய் உணர இயலும் என்றும் ஒன்றுமற்றதில் அடங்கியிருக்கிறது இப்பிரபஞ்சம் என்றும் இறுதியில் ஒரு கனவின் வழி உரைத்துப்போகிறார். கிட்டத்தட்ட பைபிளின் கடைசி நூலான ‘வெளிப்படுத்தின சுவிசேஷத்திற்கு இணையானதொரு படிமக்கனவு.  

ஆதியோடு ஒன்றும் அறிவைப் பெறுவதுதான் நீதியார் செய்த தவம் என்கிறது ஒளவைக்குறள். தனது 51வது வயதில் போரும் அமைதியும் (1869), ஆன்னா காரனீனா (1877) எனும் இரு நாவல்களை எழுதிய தல்ஸ்தோய், தான் எதையும் சாதிக்கவில்லை, வாழ்க்கை அர்த்தமற்றதென எண்ணலானார். அப்போது ‘நான் யார்’ எனும் சுயசரிதையின் மூலம் தன் தேடலைப்பற்றியும், தான் கண்டறிந்தவற்றையும் எழுதினார். 1882ல் ரஷிய சஞ்சிகையில் வெளியானாலும் பிறகு ‘வாக்குமூலம்’ என 1884ல் ஜெனீவாவில் பிரசுரமானது. அந்நூல் தனக்குள்ளான விசுவாசம் சார்ந்த மனப்போராட்டங்களை, ஆதியிலிருந்து பல மகான்களால் தேடப்பட்ட அல்லது அத்தேடல்களின்வழி மகான்களான, வாழ்வின் அர்த்தம் பற்றிய கேள்விகளினூடே தன்னறிதலைப் பகிர்ந்துகொண்டார். அவரது மெய்ஞானத் தேடலின் சுருக்கம். 

தன் மெய்வழிப்பாதையில் ஆர்தர் ஷோப்பனவர், சாக்கியமுனி புத்தர், சாக்ரடீஸ், பழைய ஏற்பாட்டின் சாலமன் ஆகியோரை எதிர்கொண்டார். பழைய ஏற்பாட்டின் நீதிமொழிகளில் சாலமனின் ‘எல்லாம் விருதா’ எனும் கூற்றையே ஆரம்பத்தில் அவரால் உணர முடிந்தது. அவ்வறிதல் கசப்பானதாகவே இருந்தது. உண்மையிலிருந்து விலகி அதலபாதாளத்திற்குள் செல்வதாய் உணர்ந்தார். 


அதன் சாரத்தைப் பேசுகிறார். ‘ஒன்றுமின்மை பற்றிய நமது அச்சமே வாழவேண்டுமெனும் அவாவாகப் பரிணமிக்கிறது. ஒருவிதத்தில் நிஜமென உணரப்படும் இப்பிரபஞ்சமேகூட ஒன்றுமின்மையாகத்தான் திகழ்கிறது என்று உற்றறிந்தார் தல்ஸ்தோய். சாலமன் கூறுகிறான், ‘சூரியனுக்கீழே மனிதனின் அத்தனை உழல்வுக்குமான லாபம்தான் என்ன? ஒரு சந்ததி கழிய அடுத்தது தழைக்கிறது. எனினும் பூமி என்றைக்குமாய் நீள்கிறது. இங்கு எதுவுமே புதிதல்ல.’ இம்மாமனிதர்களைப் போன்றே நானும் எண்ணுகிறேன். கால தேச வர்த்தமானங்களுக்கும் காரண காரியங்களுக்கும் உட்பட்டும் அப்பாற்பட்டும் இங்கு எதுவுமில்லை என்பதே என் பதில். 

பகுத்தறிவால் கண்டதென்னவோ எல்லைக்குட்பட்டதை  எல்லைக்குட்பட்டதுடனும் அதற்கு அப்பாற்பட்டதை அதனுடனும் ஒப்பிட்டு பொருண்மை பொருண்மையாகவும், ஆற்றல் ஆற்றலாகவும் அவா அவாவாகவும் எல்லைக்குட்பட்டது எல்லைக்குட்பட்டதாகவும், ஒன்றுமின்மை ஒன்றுமின்மையாகவுமே தொடர்கின்றன. அதுதாண்டிப் போக இயலவில்லை. வாழ்க்கை அர்த்தமற்றதாயினும் அவ்வாழ்வுக்கான நம்பிக்கை அதற்கான அர்த்தத்தையும் வாழ்வதற்கான சாத்தியத்தையும் பெற்றுத்தருவதாக அறிந்தேன் என்கிறார்.

‘செறிந்து அறிந்து நாடிச் செவ்விதாயுள்ள அறிந்தரனை ஆய்ந்து கொளல்’ என ஒளவைக்குறள் உரைப்பதுபோல் ஆரம்பம் முதலே எல்லைக்குட்பட்டதற்கும் அதற்கு அப்பாற்பட்டதற்கும் இடையிலான உறவை வார்த்தைக்குட்படுத்த முயல்வதே மானுடத்தின் தேடலாக இருந்துவருகிறது’ என்றறிகிறார்.

‘அனைத்தின் தோற்றம் போல, அனைத்தைப் பற்றிய விளக்கமும் மறைபொருளாய் எல்லையற்றதில் பொதிந்திருக்க வேண்டுமென்பதை நானறிவேன். எனினும் தவிர்க்கவியலாமல் உய்த்ததுணர முடியாத நிலைக்கு ஆளாவேன் என்பதால் அதைப்பற்றி அறிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. உய்த்ததுணர முடியாதவை அப்படியே இருக்கட்டுமென்றே விரும்புகிறேன். நுண்ணறிவு அத்தனை திடமானதல்ல என்பதால் அல்ல (அது திடமானதுதான் ஆனால் அதற்கு அப்பால் அதுபற்றி என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை). ஆனால் நுண்ணறிவு எல்லைக்குட்பட்டது என்பதால்தான். உய்த்ததுணர இயலா தருணங்கள் வாய்க்கையில் அது காரணகாரியங்களின் தேவையைக் கொண்டதாக இருக்கவேண்டுமே தவிர நம்பிக்கையின் எதிர்பார்ப்பாக இருத்தல் கூடாது என்பதாலேயே  நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.’

வெறும் அறிவின் வழியன்றி உணர்வின் வாயிலாகவும் மெய்ஞானப் பயணம் தொடர்தல் சித்தர்வழி. திருமந்திரம் பாடலொன்று ‘வெளியில் வெளிபோய் விரவிய வாறும், அளியில் அளிபோய் அடங்கிய வாறும், ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறுந்தெளியும் அவரே சிவசித்தர் தாமே’ என்கிறது. பிரபஞ்ச உணர்வு வெளியில் வியாபித்து அன்பில் நெகிழ்ந்தடங்கி ஞானப் பேரொளியில் அமிழ்ந்து தெளிந்துணரும் சித்தரே அவராகிறார்.   

ரூமி பாடுகிறார்: 

ஒரு நிலவெளியுள்ளது
அங்கு உனைச் சந்திப்பேன்
அப்புல்வெளியில் ஆன்மா
படுத்திருக்கையில்
எதுபற்றியும் பேசுவதற்கு அன்றி
உலகம் வெகுவாய் நிரம்பிக்கிடக்கிறது
கருத்துகள், மொழி
அவற்றின் வழியான சொற்றொடர்
எவ்வொன்றும்
புலப்படுவதாய் இல்லை.

அவ்வகண்ட பரப்பின் வெளியில்தான் தல்ஸ்தோய் எனும் மகானும் உலவுகிறார்.