ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சமுர்த்தி திட்டமும், பொறுப்பற்ற உத்தியோகத்தரின் பொறுப்பற்ற தன்மையும்: பொறுப்புக் கூறுவது யார்

சமுர்த்தி திட்டம் வறுமையை இல்லாமலாக்கி பொருதாரச் செழிப்பினை மேம்படுத்தும் திட்டம். நாட்டின் அடிப்படை வசதிகளை கண்டிராத மக்களின் வசதி வாய்ப்புக்களை மேம்படுத்தி மகிந்தசிந்தனையின் செயல் வடிவத்தை அனைவரும் நுகர்ந்து ஆசியாவின் ஆச்சரியமிக்க நாட்டைக் கட்டியெழுப்பிடத் துடிக்கும் இன்றைய அரசினதும், அதன் தலைவரினதும் கனவுகளுக்கு சிலர் தடையாகவும், அதனை கொண்டுசெல்வதிலுள்ள ஆர்வமின்மையும், தொழிலில் பற்றும் அற்றுக் காணப்படுவதன் காரணமாக மக்கள் அரசுமீதும், உயர் அதிகாரிகள் மீதும் பழிபோடுகின்ற நடைமுறை நாட்டில் பரவலாகவே பேசப்படுகின்ற ஒருவிடயமாகும்.அதிலும் கிராமங்களில் குறிப்பாக ஏழைகள் அதிகமாக வாழுகின்ற மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகளின் அசமந்தத் தனத்தினால் அரசை விமர்சிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது. அரசின் சம்பளத்தை மாதாந்தம் சுளையாக பெற்றுக் கொண்டு அரச தொழிலை இரண்டாந்தரமாகவும், தன்னுடைய தனிப்பட்ட தொழில்துறையை முதலாந்தரமாகவும் கொண்டுள்ளமையினால்தான் இத்தகைய நிலமை உருவாகின்றது.
உண்மையில் அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற எத்திட்டமும் வெற்றியடைய வேண்டுமாக இருந்தால் மக்களுக்கு முழுமையாக அத்திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும். கொழும்பிலிருந்து அமைச்சு மட்டத்தில் உயர் அதிகாரிகள் திட்டமிட்டு பிரதேசங்களுக்குச் அத்திட்டம் செல்கின்றபோது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோலாகிவிடுகின்றது. இதனை ஒழித்துக் கட்டவேண்டும். தன்னுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து தொழிப்பட வேண்டும். அதிகாரிகள் மக்களுக்கான சேவையை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். அதற்காகவே மக்களின் வரிப்பணம் சம்பளமாக அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதற்கான செயற்பாடுகளை மனசார செய்கின்றோமா? என்றால் கிடையவே கிடையாது. அதற்குக் கூறும் காரணங்கள் பல அதாவது 'அரசாங்கத்தின் சம்பளம் குடும்பத்தை நடாத்தப் போதுமா? அதற்காகத்தான் ஏனைய தொழில்களைச் செய்கின்றோம்' என்று கூறுவர். வேறு தொழில் செய்வதானாலும் எமக்குரிய கடமை நேரம் தவிர்ந்த நேரத்தில் மேற்கொள்ளலாம். அதனை விடுத்து எந்தத் துறையாக இருந்தாலும் அரசஅதிகாரிகள் அசமந்தமாக நடப்பதன் காரணமாக மக்கள் கஷ்டத்திற்குள்ளாகின்றார்கள் என்பதை சற்று கவனத்திற் கொள்வது சாலச்சிறந்ததாகும்.
அந்த அடிப்படையில் வறுமையைப் போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சமுர்த்தித் திட்டத்திற்குள் இணைந்து கொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிலரின் பொறுப்பற்ற தன்மை காரணமாக அரச தொழிலை இரண்டாந்தரத் தொழிலாகவும் தன்னுடைய சொந்தத் தொழிலை முதன்மைப்படுத்தியும் செய்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அடிப்படை வசதியற்ற மக்களுக்காக, வறுமையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கும் அந்த மக்களுக்காக எதனையும் செய்யாது உலாவருகின்ற சில சமூர்த்தி உத்தியோகத்தர்களின் (ளுனுழு) பொறுப்பற்ற தன்மையினை பிரதேச செயலாளர்கள், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்கின்ற அதிகாரிகள் சரியான முறையில் மேற்பார்வை செய்யாததன் விளைவு, அரச நிதியினையும், அரசின் கொள்கையினையும் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்றும் கூறகின்றனர் அம் மக்கள்.
குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள ஒரு பிரதேச செயலகத்தின்கீழ் சேவையாற்றுகின்ற (ஆட்டோ றைவரான) சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தினமும் காலை தொடக்கம் மாலை நேரம் வரையிலும் தன்னுடைய முச்சக்கர வண்டியின் ஓட்டுநராக இருந்து தொழில் செய்கின்ற இழிநிலையைக் காணுகின்றபோது இவருடைய பிரதேசத்து ஏழை மக்களின் நிலைமையை என்னவென்று கூறுவது. இந்த அதிகாரியைத் தேடி அவருடைய பிரதேசத்து மக்கள் பிரதான வீதியில் அவர் ஆட்டோவை வைத்திருக்கும் ஆட்டே கூடத்திற்கு வந்து மக்கள் சந்திக்க வேண்டியிருப்பதாகவும், மக்களின் பணியில் எவ்விதமான அக்கரையுமற்று இவர் காணப்படுகின்றார். இவரைப்பற்றிய முறைப்பாடுகள் பலதடவைகள் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதிகாரிகள் யாரும் கவனம் கொள்வதில்லை. குறிப்பாக இப்பிரதேச செயலகத்தின் பகுதிகளின் கீழ் பல சிறிய சிறிய கிராமங்களும், ஒரு சிங்களக் கிராமத்தையும், ஒரு தமிழ் கிராமத்தையும் உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் இவருடைய பிரிவு மாத்திரம் எவ்விதமான முன்னேற்றமும் இன்றிக் காணப்படுவதாக மக்கள் கவலைபடக் கூறுகின்றனர்.
கடந்த அரசின் தலைவியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது இதற்குரிய உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். முழுமையாக அரசியல் பின்னணியில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இத் தொழில் வழங்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்தில் சில பிழையான நபர்களும் நுழைந்துவிட்டனர். அந்த பிழையான நபர்களாக இவர்களைப் போன்றோர் இருப்பதன் காரணமாகத்தான், அத் தொழிலின் மகத்துவத்தை உணராததன் விளைவுதான், அரச நிதியும், அரசின் திட்டங்களும் சரியான முறையில் மக்களைச் சென்றடைவதில் தாமதமும், குறைவும் ஏற்படுகின்றன. இவ்வாறு தட்டிக் கழித்துச் செயற்படுகின்ற உத்தியோகத்தர்களுக்கு எத்தகைய எதிர் நடவடிக்கைகளும் மேற்கொள்ள அதிகாரிகளும் முன்வருவதில்லை. இது தொடருமானால் பிழைகள் சங்கிலிபோல் தொடரும். இதன் பின்னர் மக்கள் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை விமர்ச்சிக்கத் தொடங்குவர். உரிய அதிகாரிகள் இந்தகைய நபர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவர்களின் பெயர்களையும், பிரதேச செயலகத்தினையும் நேரடியாகக் கூறாது தவிர்த்துக் கொள்கின்றேன். இதற்குப் பின்னரும் இது தொடருமானால் பெயர்களுடன் கட்டுரை தந்திமகனால் வெளிப்படுத்தப்படும்.
வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்பமும், பின்னணியும் :
வறுமை குன்றிய செழிப்பான இலங்கைத் தேசமொன்றினைக் கட்டியெழுப்புதல் எனும் நோக்கும், பொது மக்களின் துணையுடன்; கூடிய அபிவிருத்தியொன்றின் ஊடாக வறுமை குன்றிய நிரந்தர தேசிய அபிவிருத்தி ஒன்றிற்காக பங்களிப்புச் செய்தல் எனப்படும் பணிக்கூற்றையும் நோக்காக் கொண்ட இலங்கையின் சமுர்த்தி அதிகாரசபையானது கடந்த 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சமுர்த்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு, இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிகள் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
சமூகத்திலே பின்தங்கிய குழுக்களில் முழுமையான அபிவிருத்தி ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் செழிப்பான இலங்கைத் தேசமொன்றினைக் கட்டியெழுப்புவதனை தமது செயற்பணியாக கொண்டுள்ள சமுர்த்தி செயற்றிட்டமானது இன்று நிரந்தர அபிவிருத்தியின் முன்னோடி செயற்றிட்டமாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டமானது அபிவிருத்தியின் நெகிழ்ச்சிகரமான மாற்றமொன்றினை ஏற்படுத்திய முக்கிய முயற்சியொன்றாகக் காணப்படுவதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக தரங்களை சாதகமானதாக மாற்றியமைப்பதற்கு ஒத்துழைப்பு நல்கின்றது.
சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வறியவர்களற்ற செழிப்பான இலங்கை தேசமொன்றினை கட்டியெழுப்பும் நோக்கை அடைவதற்கும், வருமானத்தை ஈட்டக்கூடியவாறான செயற்றிட்டங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கும் இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் வறுமை ஒழிப்பிற்கான சார்க் பிரகடனத்தைப் பின்பற்றி மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் செழிப்புமிக்க நற்புறவு கிராமம் ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித் திட்டமானது நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சமுர்த்தி செயற்றிட்டத்தை 1996 ஆம் ஆண்டிலே மக்கள் முன்கொண்டுவருகின்றபோது 28.8மூ ஆகக் காணப்பட்ட இந்நாட்டின் வறுமை விகிதமானது 2009 ஆம் ஆண்டாகும்போது 15மூ ஆக குறைந்திருந்தமையானது வறுமை ஒழிப்பிற்காக பாடுபடும் பிரதான இடைதரகர் என்கிற வகையில் மேற்கொண்டுள்ள சமுர்த்தியதிகாரிகளினதும் பணியானது மிகச் சிறப்பானதாகக் காணப்பட்டமை சிறந்த இவ்வாறு இப்பாரிய தேசியப் பணியினை நிறைவேற்றுவதற்கு உறுதி பூண்ட, நாடு முழுவதும் பரந்து கிடக்கும் சமுர்த்தி குடும்பத்திலிருக்கின்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 25,000 ஆகக் காணப்பட்டது.
இவ்வாறாக வறுமையினை இல்லாமலாக்குவதற்கான மகத்தான பணியினை மேற்கொள்வதற்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மீது கவனம் செலுத்தப்படலாயின. அங்கு, சமுர்த்தி உதவி பெறும் மற்றும் கிராம சேவை அலுவலகர் பிரிவுகள் அடிப்படை அபிவிருத்தித் திட்டமிடல் அலகாகவும் மேற்கொள்ளப்பட்டு இதற்கான நிதியூட்டமானது அரச நிதி மற்றும் சமுர்த்தி வங்கிக் கடன் என்பவற்றின் மூலம் பிரதானமான நிதிப் பங்களிப்பினை கொண்டுள்ளது. இதன் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை மையப்படுத்திய வகையில் நூற்றாண்டு அபிவிருத்தி நோக்கிய இலக்குகளையும், மகிந்த சிந்தனைத்துவ அடிப்படையிலும் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் ஆன்மீக மற்றும் சமூக அபிவிருத்தி, வாழ்வாதார அபிவிருத்தி. உட்கட்டமைப்பு அபிவிருத்திபோன்ற மூன்று முறைகளின்கீழும் இயங்குகின்றன.
இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது சமுர்த்தி நன்மைப் பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வாதார அபிவிருத்தியின் பொருட்டு பல்வேறுபட்ட செயற்றிட்டங்களுக்கு அவர்களை ஈடுபடுத்தும் பாரிய முயற்சியினைப் பொறுப்பேற்றுள்ளது. முக்கியமாக விலங்கு வேளாண்;மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டங்களை, சமுர்த்தி உதவி பெறுவோரையும், குறைந்த வருமானம் பெறுவோரையும் இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளது. இங்கு விலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டங்களில் நபர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களது வேலை இல்லாப் பிரச்சினைக் குறைதல், பொருளாதார ரீதியில் வலுவடைதல் மற்றும் குடும்பத்தின் போஷணை மட்டம் அதிகரித்தல் என்பன இடம்பெறுகின்றன.
சமுர்த்தி நன்மைப் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் பொருட்டு வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்;கள் பல செயற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக கைத்தொழில் செயற்றிட்டங்கள் இவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன. தற்போதைய போட்டித் தன்மைமிக்க சந்தைக்குப் பொருத்தமான கைத்தொழில் உற்பத்திகளை தயாரிக்கும்போது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் அதேபோன்று கட்டட கைத்தொழில் என்பவற்றினையும் அபிவிருத்தி செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமுர்த்தி நன்மைப் பெறுவோரினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கைத்தொழில் முயற்சிகளில் நிலவிவரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைனகள் என்பவற்றினை இனங்கண்டு நடைமுறைச் சந்தைக்கு தரமிக்க உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தல் மற்றும் புதிய கைத்தொழிலாளர்களின் செயற்றிட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப அறிவு, மூலதன உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் என்பவற்றினை பிரதான நோக்காகக் கொண்டு கைத்தொழில் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
'கிராமத்திற்கு சிறு கைத்தொழில்' என்ற தொனிப்பொருளினை நோக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், உள்நாட்டுச் சந்தையின் கேள்விக்கேற்ப பிரதான மூன்று நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் இது செயற்படுத்தப்படுகின்றது.
  1. சிறிய அளவிலான கைத்தொழில் செயற்றிட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
  2. அரிசி தயாரிப்புக் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
  3. முன்மாதிரிக் கைத்தொழில் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம். ஆகியனவற்றைக் கூறலாம்.
இவ்வாறாக இலங்கையிலே முன்னெடுக்கப்பட்டுவரும் வறுமை ஒழிப்புத் திட்டமாகிய சமுர்த்தித் திட்டம் இன்று சர்வதேச அளவில் ஒரு மகத்தான திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் கூட இத்திட்டத்தை தத்தமது நாடுகளில் சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. எனவே, இத்திட்டம் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் வெற்றிப் பாதையை நோக்கியே நிச்சயமாக பயணிக்கும். இருப்பினும், மக்களின் மேம்பாட்டை இலக்காக் கொண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக மக்கள் வெற்றிபெறுவார்கள்.
அதேவேளை இத்திட்டத்தினை மேலும் வலூவூட்டம் செய்வதற்காகவேண்டி இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. ஊழியர்களின் தொழில் பாதுகாப்புத் தன்மை அப்போது காணப்படாமையினால் ஊழியர்கள் தமது தொழிலின் பாதுகாப்புத் தன் மையினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், சமுர்த்தி உதவி பெறுவோரும் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ஆம் ஆண்டிலே முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது வெளியிட்ட 'மஹிந்த சிந்தனை' கொள்கை பிரகடனத்தின் மூலம் சமுர்த்தி நன்மை பெறுவோருக்கு வழங்கும் நன்மைகளை மேலும் பலப்படுத்தி உறுதிப்படுத்துவதாகவும் நன்மைத் தொகையினை மேலும் அதிகரிப்பதாகவும் இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றினை தயாரிப்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது சமுர்த்தி ஊழியர்களின் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வூதியச் சம்பளம், தொழில் பாதுகாப்பு என்பன தொடர்பாக மீண்டும் 2009 ஆம் ஆண்டிலே 'மஹிந்த சிந்தனை' தொலை நோக்கின் மூலம் மேலும் உறுதிப்படுத்தியதுடன் அதன் பிரகாரம் இந்த திவிநெகும சட்டமானது சமுர்த்தி நன்மை பெறுவோருக்கும், குறைந்த வருமானம் பெறுவோருக்கும் மற்றும் சமுர்த்தி ஊழியர்களுக்கும் ஓய்வூதியச் சம்பளம் உள்ளிட்ட ஏனைய பல்வேறு நன்மைகளை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றாக விளங்கிற்று.
எனவே, அன்று இத்திட்டத்தை பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. இத்திட்டத்தை அமுல்படுத்துகின்ற அடிமட்ட மக்களுக்கான உத்தியோகத்தர்களாக ஓய்வூதியத்தைப் பெற்றுத் தருகின்றது. ஆனால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சுமக்க முடியாதவிடத்து தான் ஒதுக்கிக் கொள்ளவேண்டும். ஒதுங்கவும் முடியவில்லை. சம்பளத்தையும் பெறவேண்டும். தன்னுடைய வாகனத்தை தானே ஓட்டி வறுமானத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் பொதுமக்களை ஏமாற்றுகின்ற சமுர்த்தி உத்தியோகத்தராக (இவ்வாறு இருக்கின்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) இராது, அரசின் ஊழியனாக, தன்னுடைய கடமையை மேற்கொள்கின்ற உண்மையானாக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். சமூகம் விழித்துக் கொள்ளுமுன் அரச ஊழியர்கள் விழித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் தன்டனை வழங்கினால் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கும்.