திங்கள், 16 நவம்பர், 2015

போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும்

போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும்
நவீன தமிழ் இலக்கியத்தில் ‘போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும்
– தமிழ் நேசன் அடிகளார்
உலக இலக்கியங்களில் ‘போர் இலக்கியம்’ என்பது தனியான ஓர் இலக்கிய வகையாகும். நவீன தமிழ் இலக்கியத்தில் போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும். உலகப் போர் இலக்கிய வரிசையில் ஈழத்துப் போர் இலக்கியங்களுக்கும் நிச்சயம் ஓர் இடம் உண்டு.
யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. அன்ரன் ஸ்ரீபன் அடிகளாரின் ‘உயிர்ப்பதிவு’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ‘போர் இலக்கியங்கள்’ தொடர்பான சிறப்புரையை ஆற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார்.
போரின் இறுதி நாட்களில் மக்களோடு இருந்து பெற்ற போர்க்கால துன்ப அனுபவங்களை ‘உயிர்ப்பதிவு’ என்ற பெயரில் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 16.06.2014 அன்று மாலை 4.00 மணிக்கு யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மன்னார் மறைமாவட்டச் சமூகத்தொடர்பு அருட்பணி மையமான ‘கலையருவி’ இயக்குனரும், மன்னா பத்திரீகை ஆசிரீயரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து கூறியதாவது:
உலக வரலாற்றில் எங்கெல்லாம் போர்கள் நடைபெற்றனவோ அங்கெல்லாம் உன்னதமான போர் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. உலக யுத்தங்களின் விளைவுகள் மட்டுமன்றி அதன்பின்னர் உலகெங்கிலும் நடைபெற்ற பல புரட்சிகளின்போதெல்லாம் சிறந்த போர் இலக்கியங்கள் மலர்ந்துள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, இரஷ்ய இலக்கியங்களில் போர் இலக்கியங்களே பிரசித்திபெற்றவையாக விளங்குகின்றன. இந்தப் போர் இலக்கியங்கள் எவற்றைப் பற்றிப் பேசுகின்றன? உரிமையும் உரிமை மறுப்பும், ஆயுதமும் ஆயுத எதிர்ப்பும், சமாதானமும் சமாதான மீறலும் பற்றி இந்தப் போர் இலக்கியங்கள் பேசுகின்றன. அதுமட்டுமன்றி, காட்டிக்கொடுத்தல், பொருளாதாரத் தடை, பழிவாங்கல், பண்பாட்டு அழிப்பு போன்ற விடயங்கள் பற்றியெல்லாம் இந்தப் போர் இலக்கியங்கள் பேசுகின்றன. ஒரு நாட்டுக்குள் இன, மத, ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரீமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடிய உள்நாட்டுப் போர்களிலிருந்தும் பல உன்னதமான இலக்கியங்கள் தோன்றின. ஐரீஷ், பலஸ்தீன இலக்கியங்கள் இதற்கு நல்ல சான்றாக விளங்குகின்றன.
தமிழில் போர் இலக்கிய மரபின் ஆரம்பமாகச் சங்ககாலத்தில் எழுந்த புறத்திணை நூல்களைக் கொள்ளலாம். புறநானூற்றிலிருந்து பதிற்றுப்பத்து வரையிலான புறத்திணை நூல்கள் போரை மட்டுமன்றி அதற்கான மன்னராட்சி அரசியலையும் முன்னிறுத்தின. காவியங்களின் பெரும் பகுதியான காண்டம்கூட ‘யுத்த காண்டம்’ என்னும் பெயரைக்கொண்டு விளங்கியது. சிற்றிலக்கியங்கள் என இன்று அறியப்படுகின்ற ‘பிரபந்த மரபிலும் இந்த நிலையைக் காணமுடிகிறது. குறிப்பாகப் ‘பரணி’ முதலிய சிற்றிலக்கியங்களின் ஆரம்பம் என்பது போர், வெற்றி அரசியல் போன்றவற்றைச் சார்ந்ததாக இருந்தது.
நவீன தமிழிலக்கியத்திலே போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் பாரதியின் வருகையோடு ஆரம்பிக்கின்றது. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்திலும் பிரதிபலிக்கின்றது. நவீன தமிழ் இலக்கியத்தில் ‘போர் இலக்கியம்’ என்றவொரு தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும். இவ்விலக்கியம் உலகெங்கிலும் தோன்றிய போர் இலக்கியங்களுக்கு இணையானதாக மதிக்கப்படுகின்றது. ஈழத்தமிழ் போர் இலக்கியம் பற்றி ஆங்கில மொழியில் நடைபெற்றுள்ள ஆய்வுகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
1985ஆம் ஆண்டு வெளிவந்த “மரணத்துள் வாழ்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பு போரைப் பதிவுசெய்த முதலாவது இலக்கியத் தொகுப்பாகும். இதனைத் தொடர்ந்து போரையும் போரின் வலிகளையும் பிரதிபலிக்கும் பல கவிதைத் தொகுதிகளும் சிறுகதைத்தொகுதிகளும் நாவல்களும் நாடகங்களும் வெளிவந்துள்ளன.
‘உயிர்ப்பதிவு’ என்ற இந்த நூலையும் ஓர் போர் இலக்கியமாகவே நோக்கவேண்டும். போரின் இறுதிநாட்களின் கண்கண்ட சாட்சியான இந்நூலாசிரியரின் அனுபவப்பதிவுகள் உலகத்தின் மனச்சாட்சியை நிச்சயம் தட்டியெழுப்பும். உண்மைக்குச் சாட்சிபகர வந்த இயேசுவின் பணியாளன் என்ற வகையில் அருட்திரு. ஸ்ரீபன் அடிகளாரும் இந்நூலின் பதிவுகள் ஊடாக உண்மைக்கு சாட்சியம் பகர்ந்துள்ளார்.
இந்நிகழ்விற்கு யாழ் குருக்கள் மன்றத் தலைவர் அருட்திரு. இ. ஸ்ரலின் அடிகளார் தலைமை தாங்கினார். யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. யஸ்ரீன் ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். யாழ் மறைமாவட்ட மனித உரீமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு. மங்களராஜா அடிகளார் ஆசியுரை வழங்கினார். இந்நூலுக்கான நயப்புரையை அருட்திரு. இரவிச்சந்திரன் அடிகளார் வழங்கினார்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

இலங்கை சோனகர்வரலாறு







இலங்கைச் சோனகர்களின் வரலாறு தொடர்பில் இன்றைய தேதி வரை பல்வேறு ஆய்வுகள், பல்வேறு வரலாற்றுக்குறிப்புகள் நம்மிடையே காணக்கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையான பதிவுகள் இலங்கைச் சோனகர்களில் வரலாற்றை கி.மு 1ம் நூற்றாண்டிலிருந்து ஆவணக் குறிப்புகள் மூலம் எடுத்தியம்பிக்கொண்டிருந்தாலும், அதற்கு முன்னர் இலங்கையில் சோனகர்கள் வாழ்ந்திருக்க முடியாதா? எனும் கேள்வியும் விடை காணப்படாமலேயே இருக்கிறது.
சோனகர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவே இருப்பதனால் அவர்களது வரலாற்றை இஸ்லாம் ஆரம்பித்த கி.பி 7ம் நூற்றாண்டிலிருந்து தொடர்பு படுத்தும் இன்னொரு பக்கமும் இலங்கை வரலாற்றில் காணப்படுவது மாத்திரமன்றி, இதுவே பெரும்பாலும் இஸ்லாமியக் கல்வியில் திணிக்கப்பட்ட ஆரம்பமாகவும் காணப்படுகிறது.
இலங்கையை ஆண்ட வெள்ளையர்கள் முதல் அதற்கு முந்தைய வெளிநாட்டவர்களும் ஏற்றுக்கொண்ட கி.மு 1ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 300 க்கிடையிலான இலங்கை தொடர்பான குறிப்புகளிலும் இலங்கையில் குடியிருந்த சோனகர்கள் பற்றிய குறிப்புகளும் சில விளக்கங்களும் காணப்படுவதனால், இஸ்லாமிய வளர்ச்சிக்குப் பின்னான சோனகர் வரலாறு என்பது முற்று முழுதாக மட்டுப்படுத்தப்பட்ட வெளியீடு என்பது தெளிவாகிறது.
இலங்கைச் சோனகர்களின் உரிமைகள் தொடர்பில் வெள்ளையர் மன்றிலேயே வாதிட்டு, வென்றெடுத்த எமது முன்னோர்கள் கலாநிதி I.L.M. அசீஸ் போன்றோரின் பெரு முயற்சியில் உலகறிந்து கொண்ட பண்டை கால சோனக வரலாறும், வாழ்வியலும் மற்றும் எம் மரபும் இலங்கை வரலாற்றில் சோனகர்கள் தனித்துவத்துடன் வாழ்ந்து வந்ததையும், அவர்கள் நாகரீகம், பொருளாதாரம், பொறியியல் முதல் வர்த்தகத்திலும் தனித்துவத்துடன் தம்மை நிலை நிறுத்தியிருந்தமையையும் நாம் காண்கிறோம்.
எனவே, எமது வரலாறு இன்னும் ஆழமாக ஆராயப்படவேண்டும் என்பது நம்மிடம் தங்கியிருக்கும் வரலாற்றுக் கடமையாகவும், நமது ஆய்வுகள் நாம் நம் பின் வருவோருக்கு விட்டுச் செல்லப்போகும் சான்றுகளாகவும் இருக்கப் போகிறது.
அதன் அடிப்படையில், சோனகர் வரலாற்றை விரிவாக ஆராயும் பல்வேறு கோணங்களைத் தாங்கிய ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள், வரலாறுகளை இவ்வலைத்தளம் தாங்கி வர இருக்கிறது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நம் வரலாறு ஒரு பக்கத்தில் அடைக்க முடியாதது, எனவே இவ்விணையத்தை அதற்கான அடிப்படைத் தளமாகவே கொண்டு இங்கே பிரசுரிக்கப்படும் ஆக்கங்களின் மூலமும் நம் தனித்துவத்தையும், வரலாறையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும், நம் அரசியல் தனித்துவத்தை நாம் பேணிக்கொள்ள நமக்குதவும் வழிமுறைகளையும் கண்டறிந்து பயன் பெற,ஆவணப்படுத்தத் அறிவையும் ஆற்றலும் நமக்கு தேவை
உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், வரவேற்கப்படுகின்றன.