குட்டுவன் கடலைத்தாண்டி
இராவண தேசம் கண்டு
கட்டினன் தனக்கேயாங்கு
தனித்துவப் பண்பு மேவ
குட்டுவனூர் மருவியாங்கு
கட்டுவனாம் மாற்றங்கண்டு
பல்கலைகள் பயின்றேநாளாய்
புத்துயிரும் பெறமின் சீரே
மயிலையும் குப்பிளான் சூழ
தெல்லியூர் குரும்பையூர் ஈறாய்
புன்னாலை தொடவேநோக்க
மல்லாகம் புறத்தேயாமே
கரண்டையின் ஐயன் காக்க
மருதடித் துதிக்கை பற்றி
வானமே எல்லையுமாக்கி
பெற்றனன் இறைநல் ஆசி
பத்திரன் வீரன் நிற்க
காப்பவன் வைரவன் நோக்க
உயருகை அவற்றேயாகி
உதித்தது அரும்பொற் சாதி
விசுவநாத புலவோன் பெரியோன்
ஆக்கிய ஆட்டம் கூப்பி
நெடுதிடும் ஆடவர்மேலாய்
அதிர்ந்த நல்வசந்தன் கூத்து
ஆதிய நன்னிலமே மாறி
காத்தவன் கண்ணயர் தருணம்
ஓட்டினன் ஊரை நிசியில்
மறைந்தன ஊரவனுறக்கம்
பட்டவை விழலேயாகி
உதிரமும் உறையக் கூர்வாள்
குத்தியே இதயம் வெம்பி
கிளம்பினன் இலட்சியம் விலக
தன்னிறை பொருள்சேராங்கே
திமிரவன் கட்டுவனூரான்
மற்றவன் தயத்தே ஒடுங்க
நித்தமும் விழிநீர் மல்கி
சிரந்தாழ் நிலையில்நாளும்
தன்னவன் நம்பியவெண்ணம்
மீண்டுமோர் பிறப்பைச்செய்தான்
கட்டுவனை கட்டிக்காத்தான்
விடியலின் வெளிச்சம்தன்னில்
ஊரது நிழலும் காண
புயலென நகர்ந்தான் மீண்டு
புதியதோர் உலகம் செய்வான்
கட்டுவன் துளிர்க்கும் இந்நாள்
உதடுகள் மலரக்கண்டு
மாறிய பொன்னாள் ஏனோ
உள்ளகம் குளிரல் காணேல்
பாட்டனவன் கையை பற்றி
பாரிதோ உன் ஊர்மொழிய
பாட்டனும் உயிரோடில்லை
கட்டியவன் கல் வீடில்லை
வளமாரி வளமும் மிதமே
மும்மாரி பொழிவும் நிதமே
சிவக் கொழுந்தன்னான் இல்லா
ஊரது எனக்கினியன்றே
விளக்கம்:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குட்டுவர் என்கிற திராவிட ஆதிக்குடியொன்று கடல்தாண்டி வந்து இராவண தேசமென்று சொல்லப்படுகின்ற இலங்கையில் தனக்கென ஒரு வதிவிடத்தை உருவாக்கிக்கொள்கிறது. தன்னுடைய அயராத உழைப்பினால் மண்வளத்தின் செழுமையை ஆதாரமாய்க் கொண்டு தன்னுடைய ஊரை அந்தக் குடியினர் விருத்தியடையச் செய்கின்றனர். காலங்கள் உருண்டோட அந்தக் குட்டுவர் வாழ்ந்த குட்டுவனூர் என்ற இடத்தின் பெயர் மருவிக் “கட்டுவன்” ஆகியது. தொடர்ந்து அந்த வம்சமும் பெருகி அம்மக்கள் பல கலைகளையும் பயின்று கட்டுவனுக்கு புத்துயிர் வழங்கத் தொடங்கினர். மயிலிட்டி, குப்பிளான், தெல்லிப்பளை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன், மல்லாகம் போன்ற அயற் கிராமங்களைக் கொண்டு கட்டுவனின் அமைவிடம் அமைந்தது. கரண்டை ஐயப்பனதும், மருதடி விநாயகரதும் இறையாசிகளை வானளாவப் பெற்றதுமட்டுமின்றி வீரபத்திரரும், காக்கும் கடவுளாம் வைரவரும் வீற்றிருக்கும் அவ்வூருக்கு இறைவிருத்தியும் சேரச் சேர அவ்வூரவரின் வாழ்க்கைத் தராதரமும் அதுவாகவே வளர்ந்தது.
அவ்வூரின் அரும்பெருஞ் சொத்தெனப் போற்றப்படும் 17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஸ்வநாதர் என்கிற புலவர் (அவருடைய ஆறாவது பரம்பரை வாரிசு நானாம்) எழுதிய வசந்தன் நாடகம் அவ்வூரின் கடும் உடலுழைப்பினால் கட்டுறுதிமிக்க தேகம் கொண்ட ஆண்களினால் இசையோடு தாளலயப் பாணியில் ஆடப்பட்டு அந்தக் கிராமத்தின் பண்பாடுகள் இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றன.
இவ்வாறான தொன்மைமிக்க வரலாறு கொண்ட அந்த ஊரின் கடவுள் சற்றே கண்ணயர்ந்த வேளையில் அந்த ஊரின் தூக்கம் கெட்டது. அந்தச் சமுதாயம் சிறுகச் சிறுக வளர்த்துவந்த ஒரு சாம்ராச்சியமே ஆட்டம் காணும்படியாக அவ்வூரின் மக்கள் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உடலின் இரத்தம் உறைந்துபோக முன்னர் கூரிய வாளொன்றினால் இதயத்தைப் பதம்பார்ப்பது போன்ற வலியை கட்டுவனின் குடியினர் உணரலாயினர். தமக்குத் தேவையானதைத் தாமே உருவாக்கி அடுத்தவன் நிழலில் வாழாத தன்னிறைவு நிலையில் வாழ்ந்த “திமிருள்ளவன்” என்கிற பதத்துக்குரிய கட்டுவன் வாழ்மக்கள் தலைதாழ்ந்து மற்றவனின் தயவுடன் வாழவேண்டிய வேதனைமிக்க ஒரு இக்கட்டுக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆனாலும் தைரியமிக்க கட்டுவனானின் நம்பிக்கை தளரவில்லை. முப்பது ஆண்டுகள் கழித்து ஓர் விடியல் பிறந்தது. கட்டுவனில் மீண்டும் அவன் கால் தடம் பதிந்தது. ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். அனைவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி ஆரவாரம். கட்டுவன் மீண்டும் அவர்களுக்கே உரித்தானது. ஆனால் இந்த மீள்குடியேற்றம் என்னைமட்டும் ஏனோ மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. காரணம், என் பாட்டன் வாழ்ந்த இடம்தான் எனக்குக் கட்டுவன். “எங்களுடைய ஊரை மீண்டும் பாருங்கள் அப்பப்பா” என்று மீளக்குடியமரும் வேளையில் அவரின் கையைத் தொட்டுக்கூற என் பாட்டன் இன்று உயிரோடில்லை. அவர் கட்டிய வீடும் இன்று அங்கில்லை. வளமாரி வைரவர் இருக்கிறார் என்பதற்காகவோ… மும்மாரியும் பொழிந்து வளம் கொழிக்கும் ஊராக இருக்கிறதே என்பதற்காகவோ என் பாட்டன் சிவக்கொழுந்தர் இல்லாத அந்த ஊரை என்னால் நேசிக்க முடியவில்லையே என்று வருந்தி நிற்பதைக் கூறுகிறது இவ்வரிகள்.
ரஞ்சித் தவா
(சிவக்கொழுந்தரின் பேரன்)
கட்டுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக