வியாழன், 21 ஏப்ரல், 2016

வைரஸ் தாக்குதலில் இருந்து உங்களதுபேஸ்புக்கை காப்பதற்கான இலகு வழி

பேஸ்புக் இப்போது பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது. ஆகவே பேஸ்புக்கை ஹக் செய்வது, ஸ்பாம் போன்ற பிரச்சினைகள் இருக்காது
உண்மையும் அதுதான். பேஸ்புக் கடந்த காலங்களை போல் அல்லாது நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த பேஸ்புக்கின் பாதுகாப்பு தன்மையையும் இன்றைய பாதுகாப்பு தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தால் பேஸ்புக் இப்போது பாதுகாப்பு விடயத்தில் அதீத அக்கறை செலுத்தியிருக்கிறது என்பது தெரியும்.

சரி அப்போ இந்த பதிவு எதுக்கென்று கேட்கிறீங்களா? பாதுகாப்பு இந்தளவுக்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறதால இனிமேல் ஹக்கிங்கோ ஸ்பாம் பிரச்சினையோ குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவம் அந்த நினைப்பில் மண் அள்ளிப்போட்டுவிட்டது. நேற்று திடீரென்று நண்பரிடம் இருந்து வந்த Message இல் is this your mom என்ற தகவலுடன் ஒரு பேஸ்புக் Application இணைப்பு வந்திருந்தது. அதை கிளிக் செய்தபோது ஒரு Facebook Application இற்கு தேவையற்ற விதத்தில் எனது பேஸ்புக் கணக்கின் பெரும்பாலான உரிமைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியை கோரியது. சந்தேகப்பட்டு குறிப்பிட்ட அந்த Message ஐ அனுப்பிய நண்பரை தொடர்புகொண்டு கேட்டபோது அந்த Message ஐ தான் அனுப்பவில்லை என்று கூறினார். இணையத்தில் தேடிப்பார்த்தபொழுது அது ஸ்பாம்தான் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.


மீண்டும் முன்னரைப்போலவே ஒரு சில ஸ்பாம்/ வைரஸ்கள், பேஸ்புக்கின் சில பாதுகாப்பு ஓட்டைகளை பயன்படுத்தி உலாவத்தொடங்கியுள்ளன. ஆகவே முற்றுமுழுதாக பேஸ்புக்கை நம்பிக்கொண்டிருக்காமல் எமக்கான பாதுகாப்பை நாமே ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது.


வைரஸ் / ஸ்பாம்
என்னை பொறுத்தவரை ஹக்கிங்கை விட இந்த ஸ்பாம் ஆபத்தானது. ஹக்கிங்கால் உங்கள் கணக்கு மட்டும்தான் பாதிக்கப்படும். ஆனால் ஸ்பாம் உங்களை பாதிப்பதோடு உங்கள் மூலமாக உங்கள் நண்பர்களையும் அவர்கள் மூலமாக அவர்களுடைய நண்பர்களையும் என தொடர்ச்சியாக பரவி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நீங்கள் இப்படியான ஸ்பாம் இனால் பாதிக்கப்பட்டால், அந்த ஸ்பாம் Automatic ஆக உங்களுடைய பெயரில் உங்கள் நண்பர்களின் Wall இல் செய்திகளை பகிர்கிறது. உங்கள் நண்பரோ நீங்கள்தான் அந்த செய்தியை பகிர்ந்ததாக நினைத்து கிளிக் பண்ணி செல்வார். இது தொடர்ச்சியாக இப்படியே பரவிக்கொண்டு செல்லும்

பேஸ்புக் Timeline இற்கு மாற்றம்பெற முன்னர் இத்தகைய இணைப்புக்களை உங்கள் நண்பர்களின் Wall இலோ அல்லது உங்களது Wall இலோ அவதானித்திருப்பீர்கள். பலர் இதுபற்றி அறிந்திருந்தாலும், இணைப்புக்கள் மாத்திரமே ஸ்பாம் என கருதியிருந்தனர். ஆனால் இதைவிட போலியான பேஸ்புக் குழும இணைப்புக்கள், போலி Fan Page இணைப்புக்கள் என பல வடிவங்களில் பரவி வந்தது.

மேலுள்ள படத்தில் உள்ளதை போன்று விநோதமான, பார்க்கத்தூண்டும் செய்திகளுடனான இணைப்புக்களே உங்கள், உங்கள் நண்பர்களது Wall களில் பகிரப்படுகிறது. இவற்றை கிளிக் பண்ணினால் இருவிதமான செயற்பாடுகள் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட சில இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கான உரிமையை கோருகின்றது. பின்னர் உங்களுக்கு தெரியாமலே உங்கள் தகவல்களை திருடிக்கொள்கிறது. சில இணைப்புக்கள் உங்களை பேஸ்புக் தளத்தை விட்டு வேறோர் ஆபத்தான தளத்திற்கு எடுத்து செல்கிறது.

அடுத்து பேஸ்புக்கில் முக்கியமானதொரு ஸ்பாம் Clickjacking அல்லது Likejacking எனப்படும் முறை. மேற்கூறப்பட்டதுபோன்ற சில இணைப்புக்களை கிளிக் பண்ணும்போது உங்களை போலியானதொரு Facebook Page இற்கு எடுத்து செல்லப்படுகிறது. நீங்கள் தற்செயலாக அந்த பக்கத்தில் எங்கேயாவது கிளிக் பண்ண நேர்ந்தால் உடனடியாக அந்த கிளிக் Like ஆக மாற்றப்படுகிறது. இதன் மூலம் உங்கள் கணக்கிற்கு ஸ்பாம் பரப்பப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் சார்பில் தகவல் அனுப்புகிறது. 

Fake Pages


பேஸ்புக்கில் எமது நட்பு வட்டத்தை தாண்டி ஏனையவர்களோடு தொடர்பினை பேணுவதற்கு Facebook Page ஒரு சிறந்த வழி. கூடவே ஸ்பாம் பரப்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வழி என்பதுதான் கவலைக்குரிய விடயம். இப்படியான போலி பக்கங்களை எப்படி அடையாளம் காண்பது? மேலே உள்ள படத்தை பாருங்கள். இது ஒரு போலி பக்கம். ஏதாவது ஒரு பேஸ்புக் பக்கத்தில் பார்க்கத்தூண்டும் செய்தியின் சாராம்சத்தை தந்து Like பண்ணினால்தான் மிகுதியை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தால் 100% அது போலி பக்கம்தான்.

இப்படியான பக்கங்களை நீங்கள் Like பண்ண முயற்சிக்கும்போது உங்கள் பேஸ்புக் கணக்கின் தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கான உரிமையை கோருகிறது. விடயம் அறியாமல் நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்கள் தகவல்கள் திருட்டு போவதுடன் உங்கள் சார்பில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

Facebook Chat ஸ்பாம்


இதுதான் எனக்கு நடந்த சம்பவம். நண்பர் வட்டத்தில் ஸ்பாம் இனை பரப்புவதற்கு சாட்டிங் ஒரு சிறந்த வழி என்றே சொல்லலாம். Wall இல் பகிரப்படும் இணைப்புக்களை விட சாட் மூலம் பகிரப்படும் இணைப்புக்கள் அதிகம் கிளிக் பண்ணப்படுகின்றன என்பதுதான் உண்மை. இதற்கு முக்கியமான காரணம் Wall Sharing இலும் பார்க்க Chatting தனிப்பட்டு விளங்குவதும், குறிப்பிட்ட அந்த நண்பர் ஆன்லைனில் இருக்கும்போதே ஸ்பாம் இணைப்பு வருவதால் அவர்தான் அனுப்பியிருக்கவேண்டும் என்ற தோற்றத்தை உண்டாக்குவதுமே. இதற்கு உடனடி தீர்வு, இப்படி வரும் இணைப்புக்களை கிளிக் பண்ணமுதல் அனுப்பிய நண்பரை தொடர்புகொண்டு அந்த இணைப்பு தொடர்பாக விசாரியுங்கள், அவர்தன் அனுப்பினாரா என்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லை எனில் அந்த இணைப்பை அகற்றிவிடுங்கள்.

சர்ச்சைக்குரிய தலைப்புடனான ஆக்கங்கள்

“Something Unbelievable is here, and I can’t believe they let it on the Internet!”  சில சமயங்களில் இதுபோன்ற தகவலுடன் கூடிய ஆக்கம் ஒன்றிற்கான இணைப்பினை கண்டிருப்பீர்கள். இதுகூட ஒரு வகை ஸ்பாம் தான். ஆனால் இது ஏனையவற்றை விட கொஞ்சம் ஆபத்து கூடியது. காரணம் இந்த இணைப்பை கிளிக் செய்தாலே உங்கள் பெயரில் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுவிடும்.

இதுபோன்ற இணைப்புக்களை காணும்போது அந்த இணைப்பின் மேல் Mouse Cursor ஐ கொண்டு செல்லுங்கள்( கிளிக் பண்ணவேண்டாம்). கொண்டு சென்றதும் இணைய உலாவியின் கீழ் Bar இனை பாருங்கள். அதில் அந்த இணைப்பிற்கான உண்மையான URL காட்டப்படும். பெரும்பாலும் அந்த URL ஆனது Short செய்யப்பட்ட URL ஆகவே இருக்கும். உதாரணமாக bit.ly, tinyurl.com, t.co போன்ற URL ஆக இருக்கும். பெருமபாலான Short பண்ணப்பட்ட இணைப்புக்கள் பாதுகாப்பானவை அல்ல.

திங்கள், 11 ஏப்ரல், 2016

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு


இந்த உலகம் உய்வு பெற வேண்டுமானால் அதில் அன்பு செழிக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை உலகிற்க்கு போதித்த பல மகான்களின் பெயர்களை வரலாறு அன்போடும் மரியாதையோடும் இன்றும் சுமந்து நிற்கிறது. அந்த மகான்களில் ஒருவரை சந்திப்போம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சிந்திப்போம்.செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி  எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார்.  


தன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.

அதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும்  உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.

உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார். மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.

To watch Biography of  Gautama Buddha  in YouTube

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு  யூடுபில் பார்க்க




ஒருநாள் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது தான் தேடிய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதாக உணர்ந்தார் சித்தார்த்தர். அவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் 'புத்தர்' என்று அழைக்கப்பட்டார். அவர் ஞானம் பெற்ற இடம் பீஹாரில் போத்ஹையா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த 45 ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து தான் உணர்ந்த உண்மைகளை போதித்தார் புத்தர். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள். 
முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.
மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.

நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.

புத்தர் தனது முதல் போதனையை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் என்ற பகுதியில் நிகழ்த்தினார். அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது. 

ஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். கிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகர் என்ற இடத்தில் காலமானார். 

புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். 

எல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.எனவே நாமும் எல்லா உயிர்களிடமும் தொடர்ந்து அன்பு செலுத்துவோம் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்துவோம். 

To watch Biography of  Gautama Buddha  in YouTube

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு  யூடுபில் பார்க்க


ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சமுர்த்தி திட்டமும், பொறுப்பற்ற உத்தியோகத்தரின் பொறுப்பற்ற தன்மையும்: பொறுப்புக் கூறுவது யார்

சமுர்த்தி திட்டம் வறுமையை இல்லாமலாக்கி பொருதாரச் செழிப்பினை மேம்படுத்தும் திட்டம். நாட்டின் அடிப்படை வசதிகளை கண்டிராத மக்களின் வசதி வாய்ப்புக்களை மேம்படுத்தி மகிந்தசிந்தனையின் செயல் வடிவத்தை அனைவரும் நுகர்ந்து ஆசியாவின் ஆச்சரியமிக்க நாட்டைக் கட்டியெழுப்பிடத் துடிக்கும் இன்றைய அரசினதும், அதன் தலைவரினதும் கனவுகளுக்கு சிலர் தடையாகவும், அதனை கொண்டுசெல்வதிலுள்ள ஆர்வமின்மையும், தொழிலில் பற்றும் அற்றுக் காணப்படுவதன் காரணமாக மக்கள் அரசுமீதும், உயர் அதிகாரிகள் மீதும் பழிபோடுகின்ற நடைமுறை நாட்டில் பரவலாகவே பேசப்படுகின்ற ஒருவிடயமாகும்.அதிலும் கிராமங்களில் குறிப்பாக ஏழைகள் அதிகமாக வாழுகின்ற மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகளின் அசமந்தத் தனத்தினால் அரசை விமர்சிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது. அரசின் சம்பளத்தை மாதாந்தம் சுளையாக பெற்றுக் கொண்டு அரச தொழிலை இரண்டாந்தரமாகவும், தன்னுடைய தனிப்பட்ட தொழில்துறையை முதலாந்தரமாகவும் கொண்டுள்ளமையினால்தான் இத்தகைய நிலமை உருவாகின்றது.
உண்மையில் அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற எத்திட்டமும் வெற்றியடைய வேண்டுமாக இருந்தால் மக்களுக்கு முழுமையாக அத்திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும். கொழும்பிலிருந்து அமைச்சு மட்டத்தில் உயர் அதிகாரிகள் திட்டமிட்டு பிரதேசங்களுக்குச் அத்திட்டம் செல்கின்றபோது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோலாகிவிடுகின்றது. இதனை ஒழித்துக் கட்டவேண்டும். தன்னுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து தொழிப்பட வேண்டும். அதிகாரிகள் மக்களுக்கான சேவையை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். அதற்காகவே மக்களின் வரிப்பணம் சம்பளமாக அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதற்கான செயற்பாடுகளை மனசார செய்கின்றோமா? என்றால் கிடையவே கிடையாது. அதற்குக் கூறும் காரணங்கள் பல அதாவது 'அரசாங்கத்தின் சம்பளம் குடும்பத்தை நடாத்தப் போதுமா? அதற்காகத்தான் ஏனைய தொழில்களைச் செய்கின்றோம்' என்று கூறுவர். வேறு தொழில் செய்வதானாலும் எமக்குரிய கடமை நேரம் தவிர்ந்த நேரத்தில் மேற்கொள்ளலாம். அதனை விடுத்து எந்தத் துறையாக இருந்தாலும் அரசஅதிகாரிகள் அசமந்தமாக நடப்பதன் காரணமாக மக்கள் கஷ்டத்திற்குள்ளாகின்றார்கள் என்பதை சற்று கவனத்திற் கொள்வது சாலச்சிறந்ததாகும்.
அந்த அடிப்படையில் வறுமையைப் போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சமுர்த்தித் திட்டத்திற்குள் இணைந்து கொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிலரின் பொறுப்பற்ற தன்மை காரணமாக அரச தொழிலை இரண்டாந்தரத் தொழிலாகவும் தன்னுடைய சொந்தத் தொழிலை முதன்மைப்படுத்தியும் செய்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அடிப்படை வசதியற்ற மக்களுக்காக, வறுமையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கும் அந்த மக்களுக்காக எதனையும் செய்யாது உலாவருகின்ற சில சமூர்த்தி உத்தியோகத்தர்களின் (ளுனுழு) பொறுப்பற்ற தன்மையினை பிரதேச செயலாளர்கள், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்கின்ற அதிகாரிகள் சரியான முறையில் மேற்பார்வை செய்யாததன் விளைவு, அரச நிதியினையும், அரசின் கொள்கையினையும் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்றும் கூறகின்றனர் அம் மக்கள்.
குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள ஒரு பிரதேச செயலகத்தின்கீழ் சேவையாற்றுகின்ற (ஆட்டோ றைவரான) சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தினமும் காலை தொடக்கம் மாலை நேரம் வரையிலும் தன்னுடைய முச்சக்கர வண்டியின் ஓட்டுநராக இருந்து தொழில் செய்கின்ற இழிநிலையைக் காணுகின்றபோது இவருடைய பிரதேசத்து ஏழை மக்களின் நிலைமையை என்னவென்று கூறுவது. இந்த அதிகாரியைத் தேடி அவருடைய பிரதேசத்து மக்கள் பிரதான வீதியில் அவர் ஆட்டோவை வைத்திருக்கும் ஆட்டே கூடத்திற்கு வந்து மக்கள் சந்திக்க வேண்டியிருப்பதாகவும், மக்களின் பணியில் எவ்விதமான அக்கரையுமற்று இவர் காணப்படுகின்றார். இவரைப்பற்றிய முறைப்பாடுகள் பலதடவைகள் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதிகாரிகள் யாரும் கவனம் கொள்வதில்லை. குறிப்பாக இப்பிரதேச செயலகத்தின் பகுதிகளின் கீழ் பல சிறிய சிறிய கிராமங்களும், ஒரு சிங்களக் கிராமத்தையும், ஒரு தமிழ் கிராமத்தையும் உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் இவருடைய பிரிவு மாத்திரம் எவ்விதமான முன்னேற்றமும் இன்றிக் காணப்படுவதாக மக்கள் கவலைபடக் கூறுகின்றனர்.
கடந்த அரசின் தலைவியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது இதற்குரிய உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். முழுமையாக அரசியல் பின்னணியில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இத் தொழில் வழங்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்தில் சில பிழையான நபர்களும் நுழைந்துவிட்டனர். அந்த பிழையான நபர்களாக இவர்களைப் போன்றோர் இருப்பதன் காரணமாகத்தான், அத் தொழிலின் மகத்துவத்தை உணராததன் விளைவுதான், அரச நிதியும், அரசின் திட்டங்களும் சரியான முறையில் மக்களைச் சென்றடைவதில் தாமதமும், குறைவும் ஏற்படுகின்றன. இவ்வாறு தட்டிக் கழித்துச் செயற்படுகின்ற உத்தியோகத்தர்களுக்கு எத்தகைய எதிர் நடவடிக்கைகளும் மேற்கொள்ள அதிகாரிகளும் முன்வருவதில்லை. இது தொடருமானால் பிழைகள் சங்கிலிபோல் தொடரும். இதன் பின்னர் மக்கள் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை விமர்ச்சிக்கத் தொடங்குவர். உரிய அதிகாரிகள் இந்தகைய நபர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவர்களின் பெயர்களையும், பிரதேச செயலகத்தினையும் நேரடியாகக் கூறாது தவிர்த்துக் கொள்கின்றேன். இதற்குப் பின்னரும் இது தொடருமானால் பெயர்களுடன் கட்டுரை தந்திமகனால் வெளிப்படுத்தப்படும்.
வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்பமும், பின்னணியும் :
வறுமை குன்றிய செழிப்பான இலங்கைத் தேசமொன்றினைக் கட்டியெழுப்புதல் எனும் நோக்கும், பொது மக்களின் துணையுடன்; கூடிய அபிவிருத்தியொன்றின் ஊடாக வறுமை குன்றிய நிரந்தர தேசிய அபிவிருத்தி ஒன்றிற்காக பங்களிப்புச் செய்தல் எனப்படும் பணிக்கூற்றையும் நோக்காக் கொண்ட இலங்கையின் சமுர்த்தி அதிகாரசபையானது கடந்த 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சமுர்த்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு, இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிகள் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
சமூகத்திலே பின்தங்கிய குழுக்களில் முழுமையான அபிவிருத்தி ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் செழிப்பான இலங்கைத் தேசமொன்றினைக் கட்டியெழுப்புவதனை தமது செயற்பணியாக கொண்டுள்ள சமுர்த்தி செயற்றிட்டமானது இன்று நிரந்தர அபிவிருத்தியின் முன்னோடி செயற்றிட்டமாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டமானது அபிவிருத்தியின் நெகிழ்ச்சிகரமான மாற்றமொன்றினை ஏற்படுத்திய முக்கிய முயற்சியொன்றாகக் காணப்படுவதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக தரங்களை சாதகமானதாக மாற்றியமைப்பதற்கு ஒத்துழைப்பு நல்கின்றது.
சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வறியவர்களற்ற செழிப்பான இலங்கை தேசமொன்றினை கட்டியெழுப்பும் நோக்கை அடைவதற்கும், வருமானத்தை ஈட்டக்கூடியவாறான செயற்றிட்டங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கும் இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் வறுமை ஒழிப்பிற்கான சார்க் பிரகடனத்தைப் பின்பற்றி மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் செழிப்புமிக்க நற்புறவு கிராமம் ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித் திட்டமானது நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சமுர்த்தி செயற்றிட்டத்தை 1996 ஆம் ஆண்டிலே மக்கள் முன்கொண்டுவருகின்றபோது 28.8மூ ஆகக் காணப்பட்ட இந்நாட்டின் வறுமை விகிதமானது 2009 ஆம் ஆண்டாகும்போது 15மூ ஆக குறைந்திருந்தமையானது வறுமை ஒழிப்பிற்காக பாடுபடும் பிரதான இடைதரகர் என்கிற வகையில் மேற்கொண்டுள்ள சமுர்த்தியதிகாரிகளினதும் பணியானது மிகச் சிறப்பானதாகக் காணப்பட்டமை சிறந்த இவ்வாறு இப்பாரிய தேசியப் பணியினை நிறைவேற்றுவதற்கு உறுதி பூண்ட, நாடு முழுவதும் பரந்து கிடக்கும் சமுர்த்தி குடும்பத்திலிருக்கின்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 25,000 ஆகக் காணப்பட்டது.
இவ்வாறாக வறுமையினை இல்லாமலாக்குவதற்கான மகத்தான பணியினை மேற்கொள்வதற்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மீது கவனம் செலுத்தப்படலாயின. அங்கு, சமுர்த்தி உதவி பெறும் மற்றும் கிராம சேவை அலுவலகர் பிரிவுகள் அடிப்படை அபிவிருத்தித் திட்டமிடல் அலகாகவும் மேற்கொள்ளப்பட்டு இதற்கான நிதியூட்டமானது அரச நிதி மற்றும் சமுர்த்தி வங்கிக் கடன் என்பவற்றின் மூலம் பிரதானமான நிதிப் பங்களிப்பினை கொண்டுள்ளது. இதன் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை மையப்படுத்திய வகையில் நூற்றாண்டு அபிவிருத்தி நோக்கிய இலக்குகளையும், மகிந்த சிந்தனைத்துவ அடிப்படையிலும் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் ஆன்மீக மற்றும் சமூக அபிவிருத்தி, வாழ்வாதார அபிவிருத்தி. உட்கட்டமைப்பு அபிவிருத்திபோன்ற மூன்று முறைகளின்கீழும் இயங்குகின்றன.
இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது சமுர்த்தி நன்மைப் பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வாதார அபிவிருத்தியின் பொருட்டு பல்வேறுபட்ட செயற்றிட்டங்களுக்கு அவர்களை ஈடுபடுத்தும் பாரிய முயற்சியினைப் பொறுப்பேற்றுள்ளது. முக்கியமாக விலங்கு வேளாண்;மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டங்களை, சமுர்த்தி உதவி பெறுவோரையும், குறைந்த வருமானம் பெறுவோரையும் இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளது. இங்கு விலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டங்களில் நபர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களது வேலை இல்லாப் பிரச்சினைக் குறைதல், பொருளாதார ரீதியில் வலுவடைதல் மற்றும் குடும்பத்தின் போஷணை மட்டம் அதிகரித்தல் என்பன இடம்பெறுகின்றன.
சமுர்த்தி நன்மைப் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் பொருட்டு வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்;கள் பல செயற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக கைத்தொழில் செயற்றிட்டங்கள் இவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன. தற்போதைய போட்டித் தன்மைமிக்க சந்தைக்குப் பொருத்தமான கைத்தொழில் உற்பத்திகளை தயாரிக்கும்போது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் அதேபோன்று கட்டட கைத்தொழில் என்பவற்றினையும் அபிவிருத்தி செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமுர்த்தி நன்மைப் பெறுவோரினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கைத்தொழில் முயற்சிகளில் நிலவிவரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைனகள் என்பவற்றினை இனங்கண்டு நடைமுறைச் சந்தைக்கு தரமிக்க உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தல் மற்றும் புதிய கைத்தொழிலாளர்களின் செயற்றிட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப அறிவு, மூலதன உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் என்பவற்றினை பிரதான நோக்காகக் கொண்டு கைத்தொழில் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
'கிராமத்திற்கு சிறு கைத்தொழில்' என்ற தொனிப்பொருளினை நோக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், உள்நாட்டுச் சந்தையின் கேள்விக்கேற்ப பிரதான மூன்று நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் இது செயற்படுத்தப்படுகின்றது.
  1. சிறிய அளவிலான கைத்தொழில் செயற்றிட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
  2. அரிசி தயாரிப்புக் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
  3. முன்மாதிரிக் கைத்தொழில் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம். ஆகியனவற்றைக் கூறலாம்.
இவ்வாறாக இலங்கையிலே முன்னெடுக்கப்பட்டுவரும் வறுமை ஒழிப்புத் திட்டமாகிய சமுர்த்தித் திட்டம் இன்று சர்வதேச அளவில் ஒரு மகத்தான திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் கூட இத்திட்டத்தை தத்தமது நாடுகளில் சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. எனவே, இத்திட்டம் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் வெற்றிப் பாதையை நோக்கியே நிச்சயமாக பயணிக்கும். இருப்பினும், மக்களின் மேம்பாட்டை இலக்காக் கொண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக மக்கள் வெற்றிபெறுவார்கள்.
அதேவேளை இத்திட்டத்தினை மேலும் வலூவூட்டம் செய்வதற்காகவேண்டி இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. ஊழியர்களின் தொழில் பாதுகாப்புத் தன்மை அப்போது காணப்படாமையினால் ஊழியர்கள் தமது தொழிலின் பாதுகாப்புத் தன் மையினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், சமுர்த்தி உதவி பெறுவோரும் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ஆம் ஆண்டிலே முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது வெளியிட்ட 'மஹிந்த சிந்தனை' கொள்கை பிரகடனத்தின் மூலம் சமுர்த்தி நன்மை பெறுவோருக்கு வழங்கும் நன்மைகளை மேலும் பலப்படுத்தி உறுதிப்படுத்துவதாகவும் நன்மைத் தொகையினை மேலும் அதிகரிப்பதாகவும் இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றினை தயாரிப்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது சமுர்த்தி ஊழியர்களின் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வூதியச் சம்பளம், தொழில் பாதுகாப்பு என்பன தொடர்பாக மீண்டும் 2009 ஆம் ஆண்டிலே 'மஹிந்த சிந்தனை' தொலை நோக்கின் மூலம் மேலும் உறுதிப்படுத்தியதுடன் அதன் பிரகாரம் இந்த திவிநெகும சட்டமானது சமுர்த்தி நன்மை பெறுவோருக்கும், குறைந்த வருமானம் பெறுவோருக்கும் மற்றும் சமுர்த்தி ஊழியர்களுக்கும் ஓய்வூதியச் சம்பளம் உள்ளிட்ட ஏனைய பல்வேறு நன்மைகளை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றாக விளங்கிற்று.
எனவே, அன்று இத்திட்டத்தை பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. இத்திட்டத்தை அமுல்படுத்துகின்ற அடிமட்ட மக்களுக்கான உத்தியோகத்தர்களாக ஓய்வூதியத்தைப் பெற்றுத் தருகின்றது. ஆனால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சுமக்க முடியாதவிடத்து தான் ஒதுக்கிக் கொள்ளவேண்டும். ஒதுங்கவும் முடியவில்லை. சம்பளத்தையும் பெறவேண்டும். தன்னுடைய வாகனத்தை தானே ஓட்டி வறுமானத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் பொதுமக்களை ஏமாற்றுகின்ற சமுர்த்தி உத்தியோகத்தராக (இவ்வாறு இருக்கின்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) இராது, அரசின் ஊழியனாக, தன்னுடைய கடமையை மேற்கொள்கின்ற உண்மையானாக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். சமூகம் விழித்துக் கொள்ளுமுன் அரச ஊழியர்கள் விழித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் தன்டனை வழங்கினால் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கும்.

வியாழன், 31 மார்ச், 2016

வைரமுத்துவின் வைரவரிகள்

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்
சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி
அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்

விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி
விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு
தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு
சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்
கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்

உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்
உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்
இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்
பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்
சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்
இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்
வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்
காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்
துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி
தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்
பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக
பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்
கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்
கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்

கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்
குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி
குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை
முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்
உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

- வைரமுத்து (தொகுப்பு - தமிழுக்கு நிறம் உண்டு)



வெகுவிரைவில் புதிய பக்கங்களுடன் வைரவரிகளுடன்


பூக்களும் காயம் செய்யும்
போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.



இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் வாழ்க்கை அவனைக்கூப்பிடுகிறது.  ஆனால், வாழ்க்கைக்கு எதிரான திசையிலேயே அவன் உதிரம் கசியும் கால்களோடு ஓடிக்கொண்டேயிருக்கிறான்.  தேன் கொள்ளப் போகும் ஈக்களுக்குத் தேனே சமாதியாகிவிடுவது மாதிரி, இந்த நூற்றாண்டுமனிதன் தன் தேவைகளைத் தேடுவதிலேயே ஆயுளைத் தீர்த்து விடுகிறான்.
*****
ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
*****
அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா?
இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
*****
சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
*****
இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
பகலை பூமியில் தொலைத்துவிட்டு
இரவை வானத்தில் தொலைத்துவிட்டு
சின்னச் சின்னக் கனவுகளை
சிகரெட் புகையில் தொலைத்துவிட்டு,
தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாலிபர் கூட்டம்.
*****
அறிவு தன் முயற்சியை நிறுத்திவிட்ட இடத்தில்தான்
மூட நம்பிக்கை முளைக்கிறது.
*****
எந்தக் கலை வாழ்க்கையிலிருந்து வரிக்கப்பட்டதோ
அது ஜீவனுள்ளதாய் பிறக்கும்.
அல்லது,
எந்தக்கலை ஜீவனுள்ளதாய் பிறக்கிறதோ
அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாய் இருக்கும்..
*****
காதல் கவிதைகள் ஒரு மொழியின் சிறகுகள்.
எந்த மொழியிலும் காதல் கவிதையைத் தொட்டால் மட்டும் அதன் உயிர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது.
காரணம் -
வாழும் காதலர்கள் வாழ்ந்த காதலர்களுக்கு ரத்ததானம் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*****
தனக்குள் இருக்கும் ஒன்றைத் தனக்கு வெளியே தேடும் தேடல்தான் காதல்.
*****
வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.
காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.
காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,
காதல் மனிதனின் வரமல்லவா?
கவிதை மொழியின் உரமல்லவா?
*****
சப்தம் கடந்த சங்கீதம் காண
வார்த்தை கடந்த கவிதைத்தேட
வர்ணம் கடந்த ஓவியம் பேண
மனசை ஆற்றுப்படுத்துங்கள். 



வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி
ஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு

மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை

உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
****
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
****
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
****
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்

முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்
****
எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்
****
உடைந்தகுடம் வழியே
வழிந்தோடும் தண்ணீர்
வாழ்வு
ஒவ்வொரு சொட்டும்
உறிஞ்சற்பாலது
****
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி?

கண்காணாக் கடவுள்
தான்தோன்றியாகுமெனின்
கண்காணும் பிரபஞ்சம்
தான்தோன்றியாகாதா?

உணர்வுள்ள காலை
மரணம்வரப் போவதில்லை
மரணமுற்ற காலை
உணர்விருக்கப் போவதில்லை
சாவுகுறித்தஞ்சுவதேன் சகோதரா?

உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?

கேள்விகள் நல்லவை
சூன்யத்தில் பூப்பூப்பவை
வாழ்வைச் சலிக்கவிடாதவை
****
தயிருக்கு வெளியே
வெண்ணெய் திரளாது
வாழ்வுக்கு வெளியே
ஞானம் பிறவாது
****
அடைத்துக்கிடக்கும் ஐம்பூதங்களைத்
திறக்கத்தானே ஐம்புலன்கள்
சாவிகளுக்கே பூட்டுகளிட்டால்
சாத்தியப்படுமா அனுபூதி?
****
ஆளை வீழ்த்தும் பள்ளங்கள் - பல
அவமானங்கள் காயங்கள்
நாளை வருமென அறிந்தாலும் - என்
நடையின் வேகம் நான் குறையேன்

ஞாலம் கருதினும் கைகூடும் - அடி
நானும் அவனும் ஒருகட்சி
காலம் ஒருநாள் சொல்லட்டும் - நான்
கடலை எரித்த தீக்குச்சி

திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஊர் வாசம். கட்டுவன் . சோ. சிவகலை.

.
“ஐயனார் கோயில் ஆலமரமும் உண்டு
 அதன்விழுதில் கட்டிய ஊஞ்சலும் உண்டு
 ஆடின எம் உறவுகள் தான் அங்கில்லை.”
            இது முகநூல் நண்பன் ஒருவரின் கவிதை. 
  இதைப்படித்த போது தான் கட்டுவன் என்ற அழகிய கிராமத்தின் நினைவுகள் துளிர்த்தன. இந்த பழம்பெரும் கிராமம் யாழ்ப்பாண நகரிலிருந்து பன்னிரண்டு மைல்தொலைவில் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதிக்கு கிழக்கேயும், யாழ்ப்பாணம் பலாலி வீதிக்கு மேற்;கேயும் அமைந்திருக்கும் இவ்வள பூமியானது வடக்கே மயிலிட்டியையும், கிழக்கே வசாவிளானையும், மேற்கே தெல்லிப்பளையினையும், தெற்கே ஏழாலையையும் அயலூர்களாக கொண்டமைந்த ஊராகும். மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான், கட்டுவன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஊராகும். ஒரு காலத்தில் வளமிகு ஊராக இருந்தாலும் இன்று ஊரே பொலிவிழந்து கிடக்கிறது. சிறுபகுதி மட்டும் துளிர்பெற்று வருகின்றபோதும் ஏனைய பகுதிகள் காடுமண்டிக் கிடக்கின்றன. இடிந்த கட்டிடங்களும், நாயுண்ணி பற்றைகளும், எருக்கலையும் நிறைந்த பாழ்நிலமாய்க் கிடக்கிறது.  
  இந்த ஊர்மக்களில் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்து வேறுநாடுகளில் தமது வாழ்க்கையை வடிவமைத்து இருபது வருடங்களாகிறது. அறிவிலும், ஆற்றலிலும், ஆன்மீகத்திலும், சிறந்திருந்த ஊர், கலை பண்பாட்டு விழுமியத்திலும் தனித்துவம் பெற்றிருந்தது. செல்வச்செழிப்பு மிக்க இவ்வூரின் குழந்தைகள் உலகின் பல பாகங்களிலும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். தாம் சென்ற இடங்களிலெல்லாம் தனித்துவத்தோடு வாழும் இவர்கள் தம்மூரின் பெயர் கூறிப் பெருமிதம் கொள்கின்றனர். 
       உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகள் என்று வரும்போது வசந்தன் ஆட்டம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதனை பார்க்கவும் ரசிக்கவும், தாம் ஆடவும் விரும்புமளவு பிரபல்யம் பெற்றிருக்கிறது என்றால் அது இந்த ஊரின் குழந்தைகள் ஊர்மேல் கொண்ட பற்றின் அடையாளம் என்றுதான் கூறவேண்டும்.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன் அலவத்தை வீரபத்திரர் மீது உட்குடை வரகவி விஸ்வநாதப்புலவரால் பாடப்பட்ட வசந்தன் பாடல்கள் இவ்வூருக்கே சொந்தமான கலை வடிவமாகும். ‘வசந்தன் என்றால் கட்டுவன் தான்’ என்று அவ்வூரவர் இன்றும் உரிமை கொண்டாடுவர்.  ஆலயங்கள் நிறைந்த பிரதேசமான இங்கு திருவிழாக்காலங்களில் இந்த வசந்தன் நாடகம் ஆடினர். இது கோலாட்டத்தை ஒத்த வடிவமாக காணப்பட்டாலும், இது தனியான கூத்து வடிவமாகும். ‘வசந்தநாடகம், வசந்தன் கூத்து.’ என்றெல்லாம் கூறப்பட்ட இது காப்பு தொடங்கி மங்களம் வரை  கொண்ட முழுவடிவத்தை கொண்ட கலை வடிவமாகும். வயதான ஆண்களே ஆடுவர். மாலையில் தொடங்கினால் அதிகாலை வரையில் தொடரும் இக்கூத்தில் மழை, இரங்கல்பாட்டு, கப்பல் பாட்டு என பலவகையான பாடல்கள் இடம்பெறும். முறைப்படி ஆலய வாசலில் வசந்தன் ஆடினால் மறுநாள் காலை மழை பொழிந்து ஊரவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அவ்வளவு சக்தி வசந்தன் நாடகத்திற்கு உண்டு. 
“மூவரால் தண்டலை கொள் அலவத்தைநகர் 
ஆதி வீரபத்திரர் மேல் வசந்த நாடகம் நான் பாட.....”
  என்று காப்பு தொடங்கும் இப்பாடல்களில் கல்தோட்டம் பிள்ளையார், முத்துமாரியம்மன், மருதடிப்பிள்ளையார், கண்ணகை அம்மன், துறட்டையிட்டி ஞானவைரவர், ஐயனார் ஆகிய தெய்வங்களை எல்லாம் வேண்டுதல் செய்து வளம் அருள வரம்வேண்டி ஊரின் வளச்சிறப்புக்கூறி சொல் நயத்தோடும் இசை நயத்தோடும் அமையும் வசந்த நாடகம் பக்தியுடன் ஆடப்பட்டது. ஊர்க்கோயில் திருவிழாக் காலங்களில் தான் இடம் பெறும். 
விவசாயத்தில் கூடிய விளைச்சலை பெற உடல் வலுவால் மண்ணை பண்படுத்திய உடற்பலங்கொண்ட வயதானவர்கள் இந்த ஆட்டத்தில் பங்கு கொள்வர். திரண்ட தோளும் பருத்த உடலும் கொண்ட கம்பீரமான ஆண்கள் விருத்தங்களிற்கு துள்ளியும், குதித்தும், வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், நிமிர்ந்தும், முகத்தில் புன்னகைசிந்தி அபிநயங்காட்டி ஆடுவதைப் பார்த்தால் இருப்பவர்களுக்கும் ஆட்டம் வரும்.   
வயதில் முதிர்ந்தவர்களும் இளமையை வரவழைத்து சிறியவர்கள் போல் ஆடுவது அவர்களுக்கு மகிழ்வை தருவதுடன் தேக ஆரோக்கியத்திற்கும் வழிசமைக்கும் விடயமாகும். எல்லோரும்  இரண்டு கைகளிலும் தடியை வைத்திருப்பர். அத்தடிகளால் மற்றவர்களுடன் தட்டி ஆடுவர். மேல் உயர்த்தித்தட்டி, குனிந்து தட்டி, இடம் வலம் மாறித்தட்டி என பாடலுக்கும் விருத்த அமைவுகளுக்கும் ஏற்ப தட்டி ஆடுவர். ஆடும் போது எழும் ஒலியும், தடிகளைத் தட்டுவதால் ஏற்படும் ஒலியும், மத்தளமும் தான் வாத்தியங்களாகும். இத்தனை எளிமையான வசந்தன் ஆட்டமானது விடியவிடிய ஆடும் போது   பொங்கி வழியும் வியர்வையானது, அவர்களின் தேக ஆரோக்கியத்தை பேணவும் புத்துணர்ச்சிமிக்கவர்களாக திகழவும் வழிவகுத்திருக்கலாம். ஏனெனில் அவ்வளவு வியக்கத்தக்க வகையில் ஊரின் அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார செழிப்பும் இருந்ததை காணமுடியும். 
துறட்டையிட்டி ஞானவைரவர் ஆலயம், விறுமர் கோயில், மருதடிப்பிள்ளையார் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம், கற்கோட்டப்பிள்ளையார் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம், வீரபத்திரர் ஆலயம், நாச்சிமார் கோயில், ஐயனார் ஆலயம் என இன்னும் பல ஆலயங்கள் சிறப்பான முறையில் மக்களால் பராமரிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆலயத்திலும் சிறப்பான வழிபாடுகள் இடம்பெற்றுவந்தன. அங்கெல்லாம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்றன. வசந்தனோடு ஒயிலாட்டமும் இப்பகுதி மக்களால்; ஆடப்பட்டுள்ளது.
முந்நூறு ஆண்டுகள் பழமையான வசந்தனாட்டத்தை ஆயிரத்துதொழாயிரத்து ஐம்பத்திநான்காம் ஆண்டு காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலாசார விழாவில் அரங்கேற்றி பாராட்டுப்பரிசில்களை பெற்றுவந்து ஊருக்கு பெருமை சேர்த்தனர். இதுபற்றி கூறும்போது நாகலிங்க விதானையார் எடுத்த பெருமுயற்சி அந்த நிகழ்வில் வசந்தனாட்டத்தை மேடையேற்ற காரணமாய் அமைந்தது என்கின்றனர்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஊர் ஆலயவாசலில் ஆடப்பட்ட வசந்தன் பற்றிய நினைவுகள் இருக்கின்ற போதும், கடைசியாக எப்போது ஆடினோம் என்பதை கூறமுடியாது அவர்களின் மனங்கள் தவிக்கின்றன. குந்த இடமின்றி ஓடியவர்களுக்கு இன்னமும் ஆறி அமர்ந்து நினைவுகளை மீட்க ஊர்முற்றம் திரும்பாதவர்களாகவே இருக்கின்றனர்.
பாடி ஆடியவர்கள் பலர் ஆயுள் முடிந்து போய்விட்டனர். மூலப்பிரதி கூட தற்போது எங்கென அறியமுடியவில்லை. வீ.ரீ.வீ. சுப்பிரமணியம்.(ஓதுவார் மூர்த்தி பட்டம் பெற்றவர்) மற்றும் மதுரைப்பண்டிதர் முத்துக்குமாரு போன்றவர்களால் வாய்வழியாக பேணப்பட்டபோதும் அவர்களது காலத்துடன் அவை வழக்கொழிந்து போயின. பல்கலைக்கழக மட்டத்திலும் ஆவணப்படுத்தல்கள் நடைபெற்றுள்ளன. வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஊரவர்கள் கூடி பல நிகழ்வுகளில் வசந்தனடித்து மகிழ்ந்து வருகின்றனர். விதானையார் நாகலிங்கம், பண்டிதர் நமசிவாயம், மத்தள முருகேசு போன்ற பலருடைய சந்ததியினர் தமக்கு இயன்றளவில் பாடல்களைத் தொகுத்து தமது ஊரின் கலைப்பொக்கிசத்தை அரங்கேற்றி மகிழ்ந்து வருகின்றனர். ஆயினும் சொந்த ஊரில் வீரபத்திரர் வாசலில் ஆடி வியர்வைசிந்தி களைத்திருக்கையில் பெய்யும் மழையில் நனையும் ஆனந்தம் பற்றி, தம் முன்னவர் கூறிய கதைகளின் நினைவுகளை சுமந்து எப்போது அந்தப்பேரானந்தம் பெறுவோம் என காத்திருக்கின்றனர், இந்த ஊர் வாரீசுகள். 
ஊர் மண்ணின் நிறம் தெரியாமலும், அதன் வாசம் நுகராமலும் இருக்கும் அவர்களுக்கு இந்த ஊரின் அறிவியல் வளம், அழகியல் வளம், பொருளாதார வளம், இன்னும் மறக்கப்பட முடியாத மனிதர்கள் கூற நிறைய உண்டு
வசந்தனாடி மகிழும் கட்டுவன் ஊரின் நினைவுகளில் நனைந்த  எமக்கு அவ்வூர் பற்றிய தகவல்களை அறிய சில அன்பர்களை சந்திக்க முனைந்தபோது வியத்தகு தகவல்கள் பல கிடைத்தன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயிலெடுத்து மகிழ்ந்த போது இங்கும் கோயில்கட்டினான் என்றும், ‘குட்டுவர்’ வந்திருந்ததால் ‘குட்டுவனூர்’ என பெயர் பெற்றதாகவும் பின்னர் ‘கட்டுவனாய்’ மருவியதாகவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அதனை நம்பச்செய்யும் வகையில் இங்கு மிகப்பழைய கண்ணகை அம்மன் ஆலயமும் காணப்படுகின்றது. ஆனால் துறை சார் ஆய்வுகள் எதுவும் இதனை உறுதி செய்ததாக தெரியவில்லை. ஆயினும் கலாசார தொன்மைமிக்க கட்டுவனூரின் அழகையும் அறிவியல் பொருளாதார செழுமை பற்றியும் அறிய முடிந்தது. அது கூட வியப்பிற்குரிய வகையிலே அமைந்திருப்பதை காணலாம்.
  வசந்தன் பாடல்களை இயற்றிய உட்குடை வரகவி விஸ்வநாதப்புலவர் மட்டுமல்ல இன்னும்பல புலவர்கள், கல்விமான்கள் இக்கிராமத்துக்கு அணிகலமாய் இருந்து புகழ் சேர்த்துள்ளனர். மயிலிட்டி தெற்கு மதுரைப்பண்டிதர், வீ.ரீ.வீ.சுப்பிரமணியம்(ஓதுவார் மூர்த்தி), மயில்வாகனப்புலவர், தொல்காப்பியக்கடல் கணேசையர், பண்டிதர் நமசிவாயம் என பல இலக்கிய கர்த்தாக்களுடைய பிறப்பிடமாக இந்த மண் திகழ்ந்துள்ளது. இதுமட்டுமல்லாது சைவத்துக்கு தன்பணியினால் பெருமைசேர்த்த கிரியாவித்தகர் கணேசக்குருக்களின்(சிவஸ்ரீ கந்த. சிவபாதசுந்தரக்குருக்கள்) பரம்பரையும் இந்த மண்ணிலேயே தோன்றி வளர்ந்தது எனலாம். இங்கிருக்கும் அற்புதம்மிகு ஆலயங்களில் வழிபாடியற்றும் பெரும்பணியை அவரது மூதாதையர் தொடங்கி பரம்பரையினரே இயற்றி வருகின்றனர். சமயம் பற்றி கூறுகையில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்று உண்டு. அதாவது இலங்கையிலேயே முதன் முதலாக ஐயப்ப சுவாமிக்கு தனியான ஆலயம் அமைக்கப்பட்டதும் இந்தக் கட்டுவன் கரண்டைக்குளம் ஐயனார் ஆலயத்துக்கு அண்மையிலே தான். கிரியாவித்தகர் கணேசக்குருக்கள் தனது குடும்ப சந்தான விருத்திக்காக சபரிமலை யாத்திரை சென்று 1983ம் ஆண்டு அழகிய ஐயப்பசுவாமியின் திருவுருவச்சிலையை  இந்தியாவிலிருந்து கொண்டுவந்து கரண்டைக்குளம் ஐயனார் ஆலயத்தில் அதே வருடத்தில் பிரதிஸ்டை செய்ததுடன்;, அன்றைய தினமே பதினெட்டுப்படிகளுடன் அமைந்த ஐயப்பன் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகளையும் ஆரம்பித்தார். அடுத்த ஆண்டே அதற்கான அருட்கடாட்சத்தை அவர் பெற்று விட்டார். ஆலயமும் விரைவாக அமைக்கப்பட்டு இலங்கையில் அமைக்கப்பட்ட பதினெட்டுப்படிகளுடனான கோயிலாக இது பெருமையுடன் திகழ்ந்து வருகிறது. தற்போதும் பக்தியுடன் விரதமிருந்து இங்கு வரும்பக்தர் குறை தீர்க்கும் பொம்மானாய் சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து அருளீர்ந்து வருகிறார்.
 
  வளமான மண்ணின் வனப்போடு பல சுவையான கதைகள் இன்னும் உண்டு. இன்று நாம்காணும் இரட்டைச்சைக்கில் இலங்கைக்கு வராத காலத்தில் இங்கு சைக்கில் கடை நடத்திய வைத்திலிங்கம் ஜெயராஜசிங்கம் என்பவர் தானே அதனை வடிவமைத்து ஓடி பிரபலம் பெற்றவர், பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இதன் மூலம் இலங்கை முழுவதும் பேசப்பட்டவர். அதே போல வட மாகாணத்தில் முதன்முதலாக பம்பாய் வெங்காயச்செய்கையை மேற்கொண்டு அதிக விளைச்சல்பெற்று ஆயிரத்து தொழாயிரத்து அறுபத்தி நான்காம் ஆண்டு வடபகுதி விவசாயிகளுள் முன் மாதிரியாகவும் வழி காட்டியாகவும் திகழ்ந்து பாராட்டுக்களைப் பெற்று விளை பூமிக்கு பெருமை சேர்த்தவர். 
   கூட்டுணர்வால் சிறந்திருந்த இங்கு பத்து கிளைச்சங்கங்களை கொண்ட ‘பாலன் ஞான உதய சங்கம்’ சிறப்பாக திகழ்ந்தது. இதனூடாக விளையாட்டு செயற்பாடுகள், நாடக, கலைச்செயற்பாடுகள் போன்;றன முன்னெடுக்கப்பட்டு வந்தன. அந்தவகையில் நாடக மற்றும் கலை செயற்பாடுகள் குறித்து நினைவு கூர்ந்த இவ்வூரின் முதியவர் ஒருவர் தனது நினைவுக்கெட்டிய சிலர் பெயர்களை குறிப்பிட்டார். ஊரைப்பிரிந்து இருபது ஆண்டிற்கு மேல் சென்று விட்டதால் முளுமையாக என்னால் பெற முடியவில்லை “இவர்களை விட இன்னும்பலர் இருந்தார்கள்” என்று கூறிய அவரால் பெயர்களை நினைவுபடுத்த முடியவில்லை. ஆனாலும் தெரிந்தவர்களை நினைவுபடுத்தினர். திரு.சின்னத்துரை புவனராஜா, திரு.கே.ரீ. பாலசுப்பிரமணியம், திரு.ஏ.வீ. பாலசுப்பிரமணியம், திரு.சி.சர்வானந்தம், திரு.மு. கணேசானந்தம், திரு.இ.பாலச்சந்திரன், திரு.ந.சண்முகலிங்கம், திரு.அ.கந்தையா (இவரை ஈழத்து சிவாஜி என்று அழைப்பார்களாம்)
  புராணக்கதைகள் சமூககதைகள் என நாடகங்கள் போட்ட இம்மக்கள் மத்தியில் கல்வியறிவு மிகுந்திருந்ததால் ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தொட்டு அறுபதுகளிலேயே ‘சோக்கிட்டீஸ்’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். தக்கன் யாகம், வள்ளிதிருமணம், சூரசங்காரம், போன்ற புராண கதைகளை மட்டுமன்றி பலதுறைசார்ந்த நாடகங்களையும் இம்மக்கள் அரங்கேற்றியிருப்பதன் மூலம் அவர்களிடம் காணப்பட்ட குறுகிய தன்மையற்ற சமூகமயப்பட்ட தன்மையை அறியமுடிகிறது. வாத்திய கலைஞர்களும் சிறப்பாய் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சுப்பையா, வல்லிபுரம் போன்ற பறைமேளக்கலைஞர்கள் ஊரின் கடைசிக்காலத்தில்(1980 களில்) சிறப்பான பணியை செய்துள்ளனர். 
  இங்கு வாழ்ந்து தமிழுக்கு பெருமைசேர்த்த  தொல்காப்பியக்கடல் கணேசையர் பற்றி குறிப்பிடல் முக்கியமானதாகும். நிறைந்த தமிழறிவும், வடமொழி அறிவும் பெற்றவர், அத்துடன் பக்தியிலும் மிகுந்தவர். வேத ஆகமங்களிலும் சோதிடம், மருத்துவம் போன்ற சகல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். ஒரு முனிவனைப்போல வாழ்ந்த இவரின் மாணவர்களில் தமிழ்த்துறை விற்பனராக பண்டிதர் நமசிவாயம் அவர்களும், வேத ஆகம துறையில் விற்பனராக கிரியாவித்தகர் கணேசக்குருக்கள்(சிவஸ்ரீ. கந்த. சிவபாதசுந்தரக்குருக்கள்) அவர்களும் விளங்கினார்கள் என்பதனை மகிழ்வுடன் கூறினார் அந்த ஊரின் முதியவர் ஒருவர். 
  இப்படியான இவ்வூரில் றம்மியமான ஆலமர சோலையில் அமைந்திருக்கும் ஐயனார் ஆலயத்தின் சக்தி மிக அற்புதமானது. இன்றும் பல அற்பு தங்களை ஐயன் நிழ்த்திக் கொண்டு தான் இருக்கிறான் என்று கூறும் ஊர்மக்கள்  தமது காவல்தெய்வமாக அவரையே நம்பியிருக்கின்றனர். இரண்டாயிரமாம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழலில் இப்பிரதேசம் மீள் எழுச்சி பெற்ற பின்னர் மக்கள் தமது ஆலயத்தை சிறப்பாக அமைத்து வருகின்றனர். சபரிகிரி ஐயப்பன் ஆலயத்திலும் விரதமிருந்து படியேறி விழா எடுத்து மகிழ்கின்றனர். ஐயனார் அலயத்தின் ஆலமரசோலை இன்னும் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஆதி தல விருட்ஷமான அரசும் தற்போதும் காணப்படுகின்றது. இந்த அரசமரத்தடியில் தான் முன்னைய காலங்களில் புராண படிப்புக்கள் செய்யப்பட்டன. புற்று ஒன்று காணப்படுகிறது, அதில் நாக தம்பிரான் இருப்பதாக கூறப்படுகிறது. 
  அருகில் காணப்படும் பலாலி இராணுவ முகாமின் பாதுகாப்பு வேலி ஆலயத்திற்கு அண்மையில் காணப்படுகிறது. அங்கு கடமையில் இருப்பவர்களின் வசதி கருதி இடர்மிகுந்த காலத்தில் ஒருநாள் இராணுவ அணியொன்று ஆலமரத்தின் கிளைகளை வெட்டும் நோக்குடன் வந்து ஆலயச்சூழலில் உள்ள ஆலமரத்தை வெட்ட தயாரான போது அங்கு திடீரென தோன்றிய நாக பாம்புகள் அவர்களுடைய ஆயுத தளபாடங்களை அவ்விடத்திலேயே போட்டு விட்டு ஓடுமளவு நிலை ஏற்பட்டுவிட்டது. இதை அறியாது பூசைக்கு வந்த ஆலயக்குருக்கள் ஆலயச்சுழலில் இராணுவ ஆயுத தளபாடங்கள் இருப்பது கண்டு விபரீதம் என்ன என அறியாது திகைத்து, பின்னர் ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்தபின்னர் குறிப்பால் உணர்ந்துகொண்டார். ஆயினும் இராணுவதளபாடங்கள் ஆலய சூழலில் இருப்பது பொருத்தமற்றது. ஏனெனில் அக்காலத்தில் போராளிகள் இரகசியமாக இருந்து தாக்குதல்களை நடத்துகின்ற காலம். இவ்வாறு ஆலய சூழலில் ஆயுதங்களிருப்பது விபரீதமானது என்பதால். ஆலயக்குருக்கள் பாதுகாப்பு வேலியில் இருப்பவர்களுக்கு விடயத்தினை தெரியப்படுத்தினார். சமகாலத்தில் ஓடிய இராணுவ அணியினரும் அதிகளவான சகாக்களுடன் வாகனங்களில் வந்து தமது ஆயுதங்களை பெற்றுச்சென்றனர். படையினர் மறுநாள் பெரும் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர். அறியாத அயற்கிராமவாசிகளான சிறுவர்கள் ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காக என்று வருவதுண்டு. இப்போது அவர்களை வெட்ட விடாது இராணுவத்தினர் கலைத்து வருகின்றனர்.
  என்றும் குறையாத அற்புதங்களும் அழகும் நிறைந்த பெரும்பகுதி மக்கள் வாழாத உயர்பாதுகாப்பு பிரதேசமாக காணப்படுகின்றது. குடியமர விடப்பட்ட இடங்களில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று மக்கள் வாழத்தொடங்கிவிட்டார்கள். ஏனைய பகுதிகளும் விரைவில் அப்படி மாறும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.  
குளிர்தேசங்களில் கூடுகட்டி வாழும் 
ஊர்க்குருவிகளின் நெஞ்சுக் கூட்டினுள்ளும்
தாய் மண்காணும் ஆசையின் தவிப்பு 
சூடாய் இருக்கிறது. 
முதாதையர்களில் கால் ரேகை வழி சுவறிய 
செம்மண்ணின் வாசம் நுகரும் ஆவல் தொகையாய் இருக்கிறது.
வசந்தனும், ஒயிலும் ஆடிக்களித்த ஆலயமுற்றத்தில் 
ஆறஅமர்ந்து மூச்சுவிடும் கனவு கனதியாய் அழுத்துகிறது.
சனிதோறும் சுவாமி கோசமிட்டு ஐயப்பனைப் பாடிக்களைத்து
ஆலமரநிழலில் படுத்துறங்கும் சுகம் காணும் எண்ணம் 
நிறைய இருக்கிறது.
பனங்கீற்று தடவிவரும் காற்று ஆலிலையில் ஓய்வெடுத்து
குளிரோடு தவளும் சுகம் பெறுவதற்காய் உடல்கள் பல காத்திருக்கு.
தீராத நோய் அழிய, பிள்ளை வரமருளும் ஐயப்பன் அருள் 
கரண்டைக்குளத்தின் வற்றிவிட்ட நீர் மீண்டும் வருமட்டும்
காத்திருக்கும் தாமரை போல எப்போதுமிருக்கும். 
குலம் தளைக்கும். நலன் விளங்கும் 
குட்டுவர்கள் வந்து பக்தியுடன் அமைத்த கண்ணகியின் காற்சிலம்பு
கட்டுவனூர் தழைக்க நல்ல இசை எழுப்பும். 
பிள்ளைகளின்  காற் சதங்கை கணகணக்க 
ஆடிமகிழ்வர் இனி ஒயிலும், வசந்தனும். 
 
கட்டுவனூர் ‘சிவமீனா’வின் தன்னூர் பற்றிய கவிதையுடன் விடைபெறுகிறோம்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உறவை இழந்த

களிப்புடன் காதலர் தினம்
கடந்துபோனது...
கவலையோடு மலர்களைப் பிரிந்த‌
ரோஜாச் செடிகள்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழில் ரகுவம்சம்






இரகுவம்சமும் யாழ்ப்பாணமும்

ரலாற்றுக்கு எட்டாத காலத்திலிருந்தே பரதகண்டம் பண்பட்ட வாழ்வு கண்டது.
ந்த வாழ்வை நிலை பெறுமாறு செய்தவர்கள் அக்கால அரசர்களேயாவர். அவ்வரசர்களது வாழ்வைப் போற்றிப் பாடுவதில் புலவர்கள் அடங்காத ஆர்வம் கொண்டிருந்தனர். காவியங்களாக வரைந்து இன்பம் கொண்டனர்.
ந்த கவிஞர்களுக்கெல்லாம் மஹாகவியாக வந்தவர் தான் காளிதாசர். செம்மொழியான வடமொழியில் இருதுசங்கார கவிநூலையும், மேகசந்தேச காதல்நூலையும், சாகுந்தல நாடக நூலையும், குமாரசம்பவ வீரம் கலந்த பக்தி நூலையும் படைத்த அந்தக் கவி வல்ல பெருமானார் தந்த வரலாற்று நூலாக, ஸ்ரீ ராமனின் உன்னத வம்ச பாரம்பரியத்தைக் கூறும் நூலாக,  இரகுவம்சம் விளங்குகிறது.
காளிதாசர்
ரகுவின் பேரால் அமைந்தாலும், அவனுக்கு முன் சென்று திலீபன் என்ற அவன் முன்னோன் கதையினின்று தொட்டு, இராமனது கதையை நடுவாக அமைத்து,  அக்கினி வருணன் வரை சென்று,  அந்நூல் நிறைவடைகிறது. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றைச் சங்ககாலப்புலவரான ‘ஈழத்துப்பூதந்தேவனார்’ என்னும் புலவரிலிருந்து தொடங்குவதே மரபு என்றாலும், அதன் தொடர்ச்சியான நூல்களைப் பொ.பி 13-ஆம் நூற்றாண்டு வரை காண இயலவில்லை.  எனவே, யாழ்ப்பாண அரசு அமைந்து அதில் சோதிடம், வைத்தியம், வரலாற்று நூல்கள் நிறைவாக எழுந்த காலமே ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியம் பெறுகிறது.
க்கால நூல்களில் தலைமை மிக்கது இரகுவம்சமாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் செய்தது போலவும், வில்லிபுத்தூரர் வியாசபாரதத்தைத் தமிழாக்கியது போலவும், கச்சியப்பச் சிவாச்சார்யார் ஸ்கந்தத்தை தமிழில் கந்தபுராணமாகச் செய்தது போலவும், யாழ்ப்பாணத்து அரசகேசரி என்பார் காளிதாசரின் இரகுவம்சத்தைத் தமிழில் செழுங்கவிகளாக, பெருங்காப்பியமாகப் படைத்திருக்கிறார்.

தமிழ் இரகுவம்சம்

ம்ஸ்கிருத மொழியில் எழுந்த பஞ்சமஹா காவியங்களுள் ஒன்றான,  19 சர்க்கங்களையும்  1569 செய்யுள்களையும் கொண்ட ரகுவம்ச மஹாகாவ்யம்,  தமிழில் அரசகேசரியால் இரகுவம்ச காவியமாகப் படைக்கப்பட்டிருக்கிறது.
15-ஆம் , 16-ஆம் நூற்றாண்டுக்குரிய வித்துவச் சிறப்பைக் காட்டும் மிகக் கடுமையான தமிழ் நடையில் இது எழுந்திருக்கிறது. பொதுக்காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச்சிறப்புக் காண்டம் என்கிற மூன்று பெரும்பிரிவுகளை உடைய இந்தத் தமிழ் நூல் 26 படலங்களையும் 2444 செய்யுள்களையும் கொண்டிருக்கிறது.
காவியப் பொருள் மரபை மூல பாடத்திலிருந்து நேரடியாக அப்படியே முழுமையாக அரசகேசரி தமிழில் பின்பற்றவில்லை. வடமொழியில் இராமகாதை விரிவாகச் சொல்லியிருப்பது போலத் தமிழில் இல்லை. அது போல நிறைவுப்பகுதியான அக்கினி
வர்மன் வரலாறு தமிழில் காணப்படவில்லை.

படலங்களும் செய்யுள்களும்.

காவிய மரபிற்கேற்ப எழுந்த இத்தமிழ் நூல் பல படங்களாகப் பிரிவு செய்யப்பட்டிருக்கிறது. அவை முறையே,
காப்பு- 1 செய்யுள்
பாயிரம்- 9 செய்யுள்

பொதுக்காண்டம்

ஆற்றுப்படலம்- 26 செய்யுள்
நாட்டுப்படலம்- 64  செய்யுள்
நகரப்படலம்- 75 செய்யுள்
அரசியல் படலம்- 22 செய்யுள்
குறைகூறு படலம்- 74 செய்யுள்
தேனுவந்தனப் படலம்- 122 செய்யுள்
இரகுவுற்பத்திப் படலம்- 51 செய்யுள்
யாகப்படலம்- 105 செய்யுள்
திக்கு விசயப்படலம்- 277 செய்யுள்
அயனுதயப்படலம் -55 செய்யுள்
அயனெழுச்சிப் படலம்- 139 செய்யுள்
மாலையீட்டுப் படலம்- 129 செய்யுள்
கடிமணப்படலம்- 85 செய்யுள்
மீட்சிப்படலம்- 129 செய்யுள்
இரகு கதியுறு படலம்- 47 செய்யுள்
இந்துமதி பிறப்பு நீங்கு படலம்- 96 செய்யுள்

சிறப்புக் காண்டம்

தசரதன் சாபமேற்ற படலம்- 125 செய்யுள்
திருவவதாரப்படலம்- 56 செய்யுள்
சீதை வனம்புகு படலம்- 157 செய்யுள்
இலவணன் வதை படலம்- 108 செய்யுள்
சம்புகன் வதை படலம்- 53 செய்யுள்
அவதார நீங்கு படலம்- 71 செய்யுள்

பொதுச் சிறப்புக் காண்டம்

குசன் அயோத்தி செல் படலம்- 108 செய்யுள்
வாகு வலயப்படலம்- 104 செய்யுள்
முடிசூட்டுப் படலம்- 123 செய்யுள்
குலமுறைப்படலம்- 33 செய்யுள்

சில மாற்றங்கள்

ரசகேசரி இராமன் வரலாற்றைச் சொல்லாமைக்கு அவரே தனது நூலில் காரணம் சொல்கிறார்.
‘பொற்றாமரை மான் ஒழியாது பொலியு மார்ப
வெற்றாழு மேனி ரகுராம சரிதை யாவும்
கற்றார் கவியின் பெரிதாம் தமிழ்க்கம்பநாடன்
உற்றான் அங்குரைத்தான் உரையாதன ஓதுகிற்பாம்’
கம்பன்
னும் பாடலில் கவிஞர் சொல்வதன் வண்ணம், கவியில் பெரிய கம்பநாடாழ்வான் கம்பராமாயணமாக ராமசரிதையைச் சொல்லியிருப்பதால், அதை நீக்கி பிறவற்றைச் சொல்கிறோம் என்கிறார். ஆக, கம்பராமாயணத்தில் அரசகேசரிக்கு மிகுந்த பற்றும் நிறைவணர்வும் இருந்திருக்கிறது.
நிறைவுப்பகுதியான அக்கினிவர்மன் கதையை அரசகேசரி ஏன் தமிழாக்கவில்லை என்று தெரியவில்லை. அது ஒழுக்கம் குறைவான அக்கினி வர்மன் கதையாதலால் அரசகேசரி தவிர்த்திருக்கலாம் என்று சிலரும், அரசகேசரி அப்பகுதியை எழுதியிருக்கலாம் ஆனால், இன்று  நமக்குக் கிடைக்கவில்லை என்று சிலரும், இன்னும் காவியம் முற்றுப்பெறவில்லை என்று சிலரும் கருதுகின்றனர்.

நூல் எழுந்த சமூக -அரசியல் பின்னணி

ரசகேசரியின் காலம் 15-ஆம் 16-ஆம் நூற்றாண்டுகள் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவர் யாழ்ப்பாண அரசவம்சத்தவர் என்றும் கருதப்படுகிறது.
க்காலத்தில் தமிழ்நாட்டில் முடியுடை மூவேந்தரின் அரசும் உடைந்து போயிருந்தது. விஜய நகரப் பேரரசு ஓங்கியிருந்தது. ஆனால், திருநெல்வேலிப்பகுதியில் சிற்றரசர் போல ஒதுங்கியிருந்த பாண்டிய அரசர்கள் தமிழிலக்கியப்பணியில் ஈடுபாட்டுடன் காணப்பட்டார்கள். குறிப்பாக, அதிவீரராம பாண்டியன் கூர்மபுராணம், லிங்கபுராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, மதனகோவை, நைடதம் போன்றவற்றைத் தமிழ்ப்படுத்தியிருப்பது சிந்திக்கத்தக்கது.
மது இளமைக்காலத்தைத் தமிழ்நாட்டில் கழித்த அரசகேசரி இவற்றால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. யாழ்ப்பாண அரச வம்சத்தைச் சேர்ந்தவராதலில் தமது வம்சத்திற்கும் தெய்வீகத் தொடர்பைக் கற்பிக்க அரசகேசரி இக்காவியம் மூலம் முயன்றிருக்கலாம் என்றும், எதிர்கால மன்னர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்பியிருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கருதுவர்.
கு என்பதற்கு கலைக்கடலையும் கைக்கடலையும் கடக்கவல்லவன் என்று பொருள் கொள்வர். இச்சிறப்பு யாழ்ப்பாணத்தரசரிடமும் இருந்தமையால் (அதாவது கல்வி, கலை அறிவும், பகைவரை அடக்கும் திறனும்) அவர்கள் ரகுவம்சத்தை விரும்பி ஆதரித்திருக்கலாம் என்பதும் சிலரது ஊகம்.

பரராஜசேகரன்
க்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகர சிங்கையாரியச் சக்கரவர்த்தி என்ற பரராஜசேகரனே இந்நூலாக்கத்திற்குத் துணையாகவும் ஊக்கமாகவும் இருந்தான் என்பது வெளிப்படை. அது இரகுவம்சத்திலேயே அரசகேசரியால் ‘பன்னு செஞ்சொல் பரராசசேகர மன்னன் இன்பம் மனங்கொள வாய்த்தது’ என்று சொல்வதாலும் பிற வசனங்களாலும் தெளிவாகிறது. யாழ்ப்பாணத்து நல்லூரில் வைத்து இரகுவம்சத்தை அரசகேசரி எழுதினான் என்றும் அதனை தஞ்சாவூர் இரகுநாத நாயக்கர் அரச சபையில் அரங்கேற்றியதாகவும் சிலர் கருதுகின்றனர். இவற்றுக்கு மாறாகக் கருதுவோரும் உளர்.

தமிழ் இரகுவம்சமும் கவிச்சிறப்பும்

ரசகேசரியின் கவிதைகளில் வித்துவச்சிறப்பு நிறைந்திருக்கிறது என்று கருதும் பலருள் அதில் கவித்துவம் நிறைவாக உள்ளது என்று கருதுதல் குறைவே. ஏனெனில் இந்நூலில் வெளிப்படும் கவித்துவச் சிறப்புக்கும் மேலாக வித்துவச்சிறப்பு விரவியிருக்கிறது.
காளிதாசர் வடமொழியில் எழுதாது தமிழில் அரசகேசரியே எழுதியிருக்கும் இரகுவம்சத்தில் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவற்றில் அரசகேசரியின் கவித்துவம் புலப்படுகிறது.
ங்கு ஒன்று கரு ஒன்றை ஈனும் நுணுக்கமான காட்சி அரசகேசரியால் படமாக்கப்படுகிறது.
‘பசிய இலைகளை உடைய தாமரையாகிய தாதி பக்கத்தில் இருக்க, பாய்கிற கால்வாய் நீர் உண்மையாகவே மருத்துவம் செய்ய, நீலோத்பலங்கள் மனம் நெகிழ, தேரைகள் வாய் விட்டுப் புலம்ப, மெல்லிய அணை போல இருக்கிற ஆமை மீது ஏறி சங்கு கருவை ஈனும்’ என்று காட்டும் கற்பனைக்கு அளவேது..?
‘பச்சடைப் பதும தாதி பாங்குறப் பாய் கால் பாணி
நிச்சய மருத்துச் செய்ய நீலங்கள் நோக்கி நெக்க
வச்சில தேரை வாய் விட்டலாற்ற மெல்லணையினாய
கச்சபவேரிந் மீதேறிக் கம்புசூல் கழிக்குமாறோ’
வ்வாறெல்லாம் சிறப்பொடு காவியம் படைத்த அரசகேசரியின் இரகுவம்சம் பிரபலமடையாமைக்குக் காரணமாக பலவற்றைக் காட்டுவர்.
வற்றுள் முக்கியமானதாக, வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்கள் கூற்று என்னவெனில் ‘கடினமான சொற்பிரயோகங்கள் உடைமையானும், வடமொழி நூலைப் பெயர்த்துப் பாடியமையானும் கற்றார்க்கன்றி மற்றோர்க்கு உவந்து சுவைத்தல் கூடாததாயிற்று’ என்கிறார்.
சைவனாயினும் அரசகேசரி இராமபக்தி மிக்கவனாயிருந்திருக்கலாம் என்றும் இந்நூல் மூலம் தெரிகிறது. இவற்றை விட தமிழ்ச் சொற்பயன்பாட்டிலும் அரசகேசரி அக்கறை செலுத்தியிருக்கிறார்.
பேரருளாளரான இராமானுஜாச்சார்யார் தமது கையொப்பத்தை ‘இராமானுசர்’ என்றே இட்டிருக்கும் சிறப்போடு இதனை ஒப்பு நோக்கலாம்.
குவம்சத்தை இரகுவம்மிசம் என்றும், திக் விஜயத்தை திக்கு விசயம் என்றும், அஜனை அயன் என்றும் அரசகேசரியார் பயன்படுத்தியிருக்கக் காணலாம். ஆனாலும், காவியம் முழவதும் அங்கிங்கெணாத படி அக்கால வழக்கிற்கு ஏற்ப வடசொற்கள் விரவிக் கிடக்கின்றன.
ன்றைக்கும் அரசகேசரி பேரில் பல ஐதீக, செவி வழிக் கதைகள் யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் காணப்படுகின்ற. இவற்றின் ஊடாகவும் அரசகேசரி எவ்வளவு தூரம் அக்கால மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டான் என்பது புலப்படுகிறது.
திலும் வரலாற்றை நோக்குகிற போது அரசகேசரி என்பவன் ஒரு கவிஞனாக, மந்திரியாக, முடிக்குரிய இளவரசனின் பாதுகாவலனாக, பக்திமானாக, இன்னும் போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்களிடமிருந்து யாழ்ப்பாண அரசை காக்க முனையும் வீரனாக பல பரிணாமங்களைப் பெறுவது கண்டு இன்புறத்தக்கது.
ரசகேசரியின் கவி வன்மை பற்றி அறிய இன்னும் சில செய்யுள்கள் தருதலே பொருந்தும்..
பாயிரத்தில் அவர் தாம் எழுதுகிற இரகுவம்சம் காளிதாசரது வடமொழிச் சொல்லின் மொழி பெயர்ப்பு என்பதுடன், அது ஒரு ஒலியை பெரிய மலை தடுத்து எதிரொலி செய்வது போல என்கிறார்.
‘வன்றிசைக் காளிதாசன் வடமொழி
தென்றிசைத் தமிழால் நனி செப்புகேன்
நன்றிசைக்கும் உரைவழி நன்னெடும்
குன்றிசைப்பது போலும் குறிப்பரோ’
வரது உவமையணியைக் காண ஒரு பாடல்..
ந்துமதிக்குச் சுயம்வரம் நடக்கிறது.. அவள் மாலையைக் கையில் கொண்டு ஒவ்வொரு அரசராகக் கடந்து செல்கிறாள். அவள் தமக்கு மாலையிடாது அப்பால் செல்கிற போது ஏமாற்றமடைகிற அவ்வரசர்களின் மனோநிலையைப் பதிவு செய்கிறது இப்பாடல்..
‘தேடுலாம் குமுதச் செவ்வாய் சுந்தரி இரவில் தொக்க
மாடு சால் அரசவீதி வயின் வயின் ஒருவிச் செல்லும்
வீடிலா தெரிசெஞ் சோதி விளக்கமதொத்தாள் வேந்தர்
நீடுகாள் இருள்சேர் மாட நிரையினை நிகர்த்திட்டாரே’
தாவது இரவில் மாடவீதியில் விளக்கோடு செல்கிற போது ஒவ்வொரு மாடமும் ஒளி பெற்று பின்னர் இருளடைவது போல, இவள் வருதலைப் பார்த்து ஒளி பெற்ற அரசர்களின் முகம், கடந்து செல்லுதலைப் பார்த்து இருளடைந்தது என்கிறார்.
க, வடமொழியில் சொல்லமுதமெனப் பிறந்த இரகுவம்சத்தின் சிறப்பை தமிழர்கள் அறியும் வண்ணம் தமிழில் அதே சுவையுடன் தந்த பெருமை அரசகேசரிக்கே உரியதாகும். எனவே, அதனைத் தமிழர்கள் யாவரும் சாதாரணமாகவேனும் அறிந்து வைத்திருத்தல் அத்தியாவசியமானது எனலாம்.

இரகுவம்ச பதிப்பு முயற்சிகள்

கணேசையர்
ந்நூல் முழுவதையும் காரைக்குடி மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுதலின் பேரில் ஆறுமுகநாவலரின் மருகரான பொன்னம்பலப்  பிள்ளை அவர்கள் 1887-ல் பதிப்பித்திருக்கிறார்கள்.
னினும், கற்றோரும் மலைக்கத் தக்க இக்காவியச் செய்யுள்களுக்குச் சீரிய பொருள் கண்டு இரு பகுதிகளாக 1915-லும் 1932-லும் வெளியிட்டவர் வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்களாவர். இவரது இவ்வுரையோடு கூடிய இரகுவம்சத்தை மஹாமஹோபாத்யாயர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் படித்து
‘உலம் பூத்த புயவரசகேசரி ஆராய்ந்து முனதுரைத்ததாய
நலம் பூத்த சுவை இரகுவம்சத்திற்கினிய உரை நன்கியற்றி
பலம் பூத்த தமிழ்வலவர் மதிப்பவெளிப்படுத்தினன் யாழ்ப்பாண மேயோன்
குலம் பூத்த நலமுடையான் கணேசையப்பேராளன் குணமிக்கோனே’
என்று சிறப்புப் பாயிரம் அளித்திருக்கிறார்.
ன்றாலும், நுண்ணிய தமிழ் இலக்கண இலக்கிய கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இல்லாமற் போயுள்ள இன்றைய சூழலில் இரகுவம்சம் காணற்கரிய நூலாய் புலவரகங்களில் உள்ள பெட்டகங்களுள் மறைந்து வாழ்தல் வருத்தத்திற்குரியதேயாகும்.
க, தமிழ் ஹிந்து தர்மத்திற்கு சிறப்புச் சேர்க்க வல்லதாய் திகழ்கிற இந்நூல் பற்றித் தமிழ்ஹிந்துக்கள் அறிந்து வைத்திருத்தல் அவசியம் மிக்கதாகும்.
ooOOOOoo