கல்விப் பணியில் இரு சகாப்தங்களை நிறைவு செய்யவுள்ள ஆசியாவின் முதல் கலவன் பாடசாலையாகிய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி தனக்கு வேண்டிய பல்வேறு வளங்களை பூரணப்படுத்துவதன் மூலம் பயனுறுதி மிக்க கல்லூரியாக மிளிர்வதற்காக காத்திருக்கின்றது. இன்று வலிகாமம் வடக்கில் நிலைமாறும் ஒரு பாடசாலையாக இக் கல்லூரி காணப்படுகின்றது. இக் கல்லூரியை வளப்படுத்துவதன் மூலம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் மீளக் குடியமர்வையும் அப்பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் துரிதப்படுத்த முடியும். மத்திய தர குடும்பங்கள் மீள குடியமர்வதற்கு இழுவிசைக் காரணியாக இப் பாடசாலையின் பயனுறுதி மிக்க கற்றல் பேறு உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வண. கலாநிதி. டானியல் பூவர், வண. எட்வேட் வாறன் தலைமையிலான அமெரிக்க மிஷனரியினர் யாழ்ப்பாணத்தில் தேவ ஊழியம் செய்வதற்காக 1816ஆம் ஆண்டு
ஐப்பசி மாதம் 15ஆம் திகதி தெல்லிப்பழையை தமது மதப்பணிக்குரிய மத்திய நிலையமாகத் தேர்ந்தெடுத்தனர். இந்நாள் தெல்லிப்பழையின் கல்வி வரலாற்றிலே மிகவும் முக்கியமான நாளாக அமையப் பெற்றது. 1816.10.15 அன்றே யூனியன் கல்லூரியின் நிறுவுநர் நினைவு நாளாகக் கொள்ளப்பட்டது. 1816இல் தெல்லிப்பழையில் பொது இலவசப் பாடசாலை (Common FreeSchool) வண. கலாநிதி டானியல் பூவர் ஆரம்பித்து வைத்தார். இத் தமிழ் மொழிப் பாடசாலையில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், கணிதம், புவியியல், விவிலியத் திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டன. சிறிது காலத்தின் பின்னர் ஆங்கிலம் போதிக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க மிஷனரி முதலாவது ஆங்கிலப் பாடசாலையாக இப் பாடசாலை அமையப் பெற்றது. இப் பாடசாலையில் ஆசிரியரும் மாணவர்களும் சைவ சமயத்தவர்களாக அமையப் பெற்றிருந்தனர். இவர்கள் தத்தம் வீடுகளில் இருந்தே நாளாந்தம் பாடசாலைக்கு சமுகமளித்தனர். இதனால் அமெரிக்க மிஷனரியினரின் மத மாற்ற நோக்கம் பெரிதளவில் வெற்றி அளிக்க வில்லை. இக் குறைபாட்டை நீக்கும் முயற்சியாக 1818ஆம் ஆண்டு 06 மாணவர்களுடன் குடும்ப விடுதிப் பாடசாலை தொடங்கப் பட்டது. வசதி படைத்த அமெரிக்க ஆங்கிலேயர் இவ் விடுதிப் பாடசாலைக்கு நிதியீட்டம் செய்தனர். இங்கு ஒவ்வொரு மாணவனும் சராசரி 10 ஆண்டுகள் கல்வி கற்றதாக அறியமுடிகின்றது. 1828இல் முதலாவது சுதேசிய கிறிஸ்தவராக இக் கல்லூரியின் பழையமாணவரான சாமுவேல் வோசெஸ்ரர் ஆசிரிய நியமனத்தை இங்கு பெற்றுள்ளார். 1818இல் 5 பெண் மாணவிகளும் இங்கு கல்வி கற்கதொடங்கியதாக அறியமுடிகின்றது. இக் கல்லூரியில் கல்வி கற்ற முதல் பெண் மாணவியின் பெயர் மிறாண்டா செல்லாத்தை என அறியமுடிகின்றது. 1825இல் தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் வளாகத்திலே ஆயத்தப் பாடசாலை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு இதில் திறமை மிக்க மாணவர்கள் மேற்படிப்பிற்காக வட்டுக்கோட்டை செமினறிக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கை அமெரிக்கமிஷனரியின் செயற்பாட்டினை மீள் நோக்குவதற்காக வந்த அன்ரசன் தொம்சன் குழுவினர் அமெரிக்க மிஷனரியினரின் முயற்சிகளுக்கு தெல்லிப்பழையில் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே அமையப் பெற்றதால் இக் குறித்த பாடசாலைகளை மூடி விடுமாறு பணிப்புரை விடுத்தனர். இந்நிலையில் 1856 முதல் 1869 வரையான 13 வருட காலத்தில் எந்தவொரு கல்வி முயற்சிகளும் தெல்லிப்பழை வளாகத்தில் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது. தெல்லிப்பழையில் பாடசாலைகள் இயங்காத நிலையில் 1869இல் உள்ளூர்வாசியான சைவப் பெருமகன் உயர்திரு செல்லப்பா என்பவர் ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவினார். 1901ஆம் ஆண்டு வரை அதன் தலைமை ஆசிரியராக கடமையாற்றி தான் இறக்கும் தறுவாயில் அப்பாடசாலையை அமெரிக்க மிஷனரியினரிடம் ஒப்படைத்தார். இப் பாடசாலையிலேயே பின் நாளில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனராக பரிணமித்த பாவலர் துரையப்பாபிள்ளை கல்வி கற்று 1901இல் செல்லப்பாவின் மறைவிற்கு பின் இப் பாடசாலையின் தலைமை ஆசிரியரானார்.
1878ஆம் ஆண்டு தெல்லிப்பழை வளாகத்திற்கு வண. சிமித் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் இவ் வளாகத்திலே தொழில் பாடசாலை ஒன்றையும் ஆரம்பித்து வைத்தார். இத் தொழில் பாடசாலையில் மரவேலை, மேசன் வேலை, தகரவேலை, அச்சுக்கலை, புகைப்படக் கலை என்பன போதிக்கப்பட்டன. 1910ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிய 2 தொழிற்பாடசாலைகளில் இது முதன்மையான தொழிற்பாடசாலையாக துலங்கியது. 1921இல் தெல்லிப்பழையில் இருந்த அமெரிக்க மிஷனரிப் பாடசாலைகள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் மேற்பார்வைக்குள் வந்தன. யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் வண. பிக்னெல் இவ் வளாகத்தின் முகாமையாளர் ஆனார். இந்நிலையில் 1929 செப்டம்பரில் தெல்லிப்பழை விடுதிப் பாடசாலையானது இருமொழிப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இப் புதிய இருமொழிப் பாடசாலைக்கு 1930ஆம் ஆண்டு முதலாவது சுதேச அதிபராக ரட்ணவரதர் பொறுப்பேற்றுக் கொண்டார். இக் காலத்தில் 225 மாணவர்கள் இக்கல்லூரியில் பயின்றதுடன் இவர்களில் 1/3 பகுதியினர் விடுதி மாணவர்களாக காணப்பட்டனர். யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியராக இருந்தவரும் இப் பாடசாலை பழைய மாணவருமாகிய ஐ.பி. துரைரத்தினம் 1935இல் இப் பாடசாலையின் அதிபராக பதவியேற்றார். இவர் பதவியேற்றது முதல் அமெரிக்க மிஷனரியின் தெல்லிப்பழை வளாகம் புதுப்பொலிவு பெற்றது. 1939ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தெல்லிப்பழை வளாகத்தில் இருந்த அனைத்துப் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து யூனியன் கல்லூரி எனப் பெயர்சூட்டினார். அன்று தொட்டு 1964 ஜனவரி வரை யூனியன் கல்லூரியின் வளர்ச்சியும் உயர்ச்சியும் அபரிதமாக இருந்தது. கல்லூரியை அவரிடமிருந்து தவிர்த்து நோக்க இயலாத அளவிற்கு கடின உழைப்பினை வழங்கினார். 1960ஆம் ஆண்டு The Union Magazine துரைரத்தினம் அவர்களது வெள்ளி மலராக வெளிவந்தது. இம் மலரானது கல்லூரியின் வரலாற்றிற்கு சிறந்த மூலாதாரமாக இன்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் சஞ்சிகையினை எடுத்து நோக்குமிடத்து 1940ஆம் ஆண்டு முதல் கல்லூரியின் சஞ்சிகையாக The Union Magazine வெளியிடப்பட்டு வருகின்றது. 1970களின் பிற்பகுதிகளில் இம் மலர் இடைநிறுத்தப்பட்ட போதும் முன்னைநாள் அதிபர் திரு. புண்ணியசீலன் அவர்களது முயற்சியினால் 2001ஆம் ஆண்டு முதல் இன்று வரை வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1659இல் Union Primary என்ற பெயரில் பாடசாலையின் கனிஷ்ட பாடசாலையின் இதழ் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. யூனியன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு 1979 முதல் தந்தை செல்வா தொடக்கப் பள்ளி என்ற நிலையில் தனிப்பாடசாலையாக
இயங்கி வருகின்றது. 1987இல் யுத்த நடவடிக்கைகள் காரணமாக கல்லூரியின் நிர்வாக கட்டிடமாகிய சான்டேஸ் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டதுடன் கல்லூரியின் அனைத்து நிர்வாக ஆவணங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந் நிகழ்வானது கல்லூரியின் நிறுவக ஞாபகத்தை பலமிழக்கச் செய்ததுடன் நிர்வாக ரீதியாக பல பின்னடைவுகள் உருவாகுவதற்கும் காரணமாக அமைந்தது.
இக் கல்லூரியானது 1947ஆம் ஆண்டு அதிஉயர் தர பாடசாலையாக (Super Grade School) தரமுயர்த்தப்பட்டமுதல் இன்று வரை பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய, சர்வதேச சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. இக் கல்லூரியின் மூன்றாவது அனர்த்த செயற்பாடாக 1990ஆம் ஆண்டு யுத்த நடவடிக்கைகள் காரணமாக தனது சொந்த வளாகத்தை விட்டு இடம்பெயர்ந்தது. 1990.06.16 அன்று தெல்லிப்பழையில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாகம் மகாவித்தியாலயத்திலும், பின்னர் இராமநாதன் கல்லூரியிலும் இயங்கியது. 1995ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது தென்மராட்சி வீரசிங்கம் மகாவித்தியாலயத்திலும் இக் கல்லூரி இயங்கியது. பின்னர் மீண்டும் இராமநாதன் கல்லூரியில் 10.09.2002 வரை இயங்கி பின்னர் 12 வருடங்களின் பின்னர் தனது சொந்த வளாகத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பல்வேறு வகைப்பட்ட வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கத்தொடங்கி படிப்படியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலுகின்றது. உயர்பாதுகாப்பு வலயத்தினுள் 2002 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கல்லூரி இயங்கிய போது அக் காலத்தில் கடமையாற்றிய அதிபரும் ஆசிரியர் குழாத்தினரும் பல்வேறு பட்ட இடர்பாடுகளுடன் கல்லூரியை இயங்கச் செய்து பல்வேறு சாதனைகளை நிலைநாட்டினர். இக்காலத்தில் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மாகாண, தேசிய, சர்வதேச சாதனைகளை இக் கல்லூரி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதற்காக கடின உழைப்பை வழங்கிய முன்னைநாள் அதிபர் திரு. புண்ணியசீலனும், ஆசிரியை திருமதி ஜெயந்தி ஜெயதரன் பாராட்டுக்குரியவர்கள். ஏறத்தாழ 14வருடங்கள் தொடர்ச்சியாக மாகாண மட்டத்தில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கவை. 2009ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரத்தில் 100% சித்திகளையும் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலைப் பாடசாலையாக தன்னை தரமுயர்த்தியது. இவ்வாறு கல்லூரியின் கடந்த கால புகழ்பூத்த அதிபர்கள் வரிசையில் அமரர் ஐ.பி. துரைரத்தினம் மற்றும் திரு.கே.பாலசுந்தரம், திரு. புண்ணியசீலன் முதலானோர் குறிப்பிடத்தக்கோர். இன்று கல்லூரியானது அதிபர் திரு.வே.க.இரத்தினகுமார் தலைமையில் இயங்கி வருகின்றது. இது தனது சொந்த வளாகத்தில் இயங்கி வருகின்ற போதிலும் பிரதான ஒன்றுகூடல் மண்டபம், மூடிய வகுப்பறைகள், மனையியல் கூடம், விவசாய அறை, செயற்பாட்டறைகள், சிற்றுண்டிச்சாலை, மைதான பார்வையாளர் கூடம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கு, வலைப்பந்தாட்டதிடல், கூடைப்பந்தாட்டதிடல், ரெனிஸ் மைதானம் முதலானவை இன்று அழிவுற்றுள்ளன.
கல்லூரி தனக்குரிய ஏந்துபிரதேசத்தினை 1990 ஆம் ஆண்டு முதல் இழந்துள்ளது. தற்பொழுது இக் கல்லூரியின் ஏந்து பிரதேசத்தில் ஒருபகுதி மக்கள் மீளக்குடியமர்வு நடைபெற்று வருகின்றது. இம் மக்கள் நீண்ட காலமாக முகாம் வாழ்க்கையில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்தனர். இம் மக்களது பிள்ளைகள் உரிய தரங்களில் உரிய தேர்ச்சிகளை அடையாது இன்று வகுப்பறைகளில் விளிம்பு நிலை மாணவர்களாகக் காணப்படுகின்றனர். இம் மாணவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை மாணவர்களது நாளாந்த கலைத்திட்டத்திற்கு மேலதிகமாக கற்பித்து வருவதில் தற்போதைய அதிபர் திரு.வே.க.இரத்தினகுமார் அதீத கவனம் செலுத்தி வருகின்றார்.
கல்லூரி தனது வரலாற்றுத் தடத்திலே புகழ்பூத்த பழைய மாணவர்களான சி.வை தாமோதரம்பிள்ளை, தந்தை செல்வநாயகம் முன்னை நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் குணரட்ணம் மற்றும் பல்வேறு நிலைப்பட்ட பழையமாணவர்களை உருவாக்கியுள்ளது. எனினும் இக் கல்லூரியானது இன்று ஒரு நிலைமாறும் பாடசாலையாக (Transition of school) காணப்படும் நிலையில் தனது 200 வருட நிறைவை எதிர்வரும் 15.10.2016 அன்று கோலாகலமாக கொண்டாடவுள்ளது. இதற்காக இரு நூற்றாண்டு நிறைவு நினைவு மண்டபமொன்றினை இலண்டன் பழையமாணவர் சங்கத்தினை முதன்மையாகக் கொண்டு ஏனைய அனைத்து பழைய மாணவர் சங்கங்களும் இணைந்து கட்டுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றன. இதன் முதலாவது நிகழ்வாக எதிர்வரும் 05.12.2014அன்று மாலை கொழும்பு பழையமாணவர் சங்கம் இரு நூற்றாண்டு நிறைவு நினைவு மண்டபத்திற்கு நிதி சேகரிப்பதற்காக மாபெரும் கலைவிழாவினை கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் கலை அரங்கில் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. இவ் விழாவிற்கு சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து கல்லூரியை வளப்படுத்துவதன் மூலம் வலிவடக்கு பிரதேசத்தை வலுவூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல் லண்டன் பழைய மாணவர் சங்கம், சிட்னி பழையமாணவர் சங்கம், மெல்போர்ன் பழைய மாணவர் சங்கம், கனடா பழையமாணவர் சங்கம் முதலானவை நிதியீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக