ஞாயிறு, 19 டிசம்பர், 2010

அம்மா

அம்மா.

உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்

எனக்குள்

நேசநதி

அருவியாய் அவதாரமெடுக்கிறது.



மழலைப் பருவத்தின்

விளையாட்டுக் காயங்களுக்காய்

விழிகளில் விளக்கெரித்து

என்

படுக்கைக்குக் காவலிருந்தாய்.



பசி என்னும் வார்த்தை கூட

நான் கேட்டதில்லை

நீ

பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .



என் புத்தகச் சுமை

முதுகை அழுத்தி அழுதபோது

செருப்பில்லாத பாதங்களேடு

இடுப்பில் என்னை

இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.



அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்

அன்பின் அகராதியை எனக்கு

அறிமுகப் படுத்தியது

என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?



எனது சிறு சிறு வெற்றிகளுக்கு

கோப்பைகள் கொடுத்தது

உனது

இதயத் தழுவலும்

பெருமைப் புன்னகையுமல்லவா ?



வேலை தேடும் வேட்டையில்

நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது

ஆறுதல் கரமானது

உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?



எனக்கு வேலை கிடைத்தபோது

நான் வெறுமனே மகிழ்ந்தேன்

நீதானே அம்மா

புதிதாய்ப் பிறந்தாய் ?



உனக்கு முதல் சம்பளத்தில்

வாங்கித்தந்த ஒரு புடவையை

விழிகளின் ஈரம் மறைக்க

கண்களில் ஒற்றிக் கொண்டாயே

நினைவிருக்கிறதா ?



இப்போதெல்லாம்

என் கடிதம் காத்து

தொலை பேசியின் ஒலிகாத்து

வாரமிருமுறை

போதிமரப் புத்தனாகிறாய்

வீட்டுத் திண்ணையில்.



எனக்கும்

உன் அருகாமை இல்லாதபோது

காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்

நுழைந்த வெறுமை.



போலியில்லா உன்முகம் பார்த்து

உன் மடியில் தலைசாய்த்து

என் தலை கோதும் விரல்களோடு

வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்



இந்த

வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்

வலுக்கட்டாயமாய்

என் சிறகுகளைப் பிடுங்கி

வெள்ளையடிக்கின்றன.

கருத்துகள் இல்லை: