சனி, 13 நவம்பர், 2010

அர்த்தமுள்ள இந்துமதம் - 16

கவிஞர் கண்ணதாசனின்
16. கண்ணனை நினைப்பவர்கள் சொன்னது பலிக்கும்.
*********************************************************



நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த சில அனுபவங்களைக் கூற விரும்புகிறேன்.



“நான் சொன்னால் பலிக்கும்; என் வாக்குப் பலிக்கும்” என்று தங்களைப் பற்றிச் சிலர் சொல்லிக் கொள்கிறார்களே அது என் விஷயத்திலும் உண்மையாக நடக்கிறது.



யாரையும் வஞ்சிக்காத ஒருவன், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவன், மனதாச் சொல்லும் எந்த வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது.



அந்த உயிர் தன் சக்தியைக்காட்டி விடுகிறது.



ஆத்திரத்தில் சொல்லும் வார்த்தைகள் மட்டுமின்றி இயற்கையாக வந்து விழும் வார்த்தைகளும் பலித்து விடுகின்றன.



எல்லாவற்றுக்கும் தெய்வ நம்பிக்கைதான் காரணம்.



‘கவிஞன் பாடினான், நகரம் எறிந்தது’ என்றும், ‘கலம்பகப்பாட்டினால் ந்த்திவர்மன் இறந்தான்’ என்றும் நாம் கேட்கிறோம்.



நான் கவிஞனோ இல்லையோ கடவுள் நம்பிக்கையுடையவன்.



என்னையறியாமலேயே வந்து விழுந்த சில வார்த்தைகள் என் வாழ்விலும் நண்பர்லக் வாழ்விலும் எப்படிப் பலித்திருகின்றன என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.



எனது நெருங்கிய நண்பர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்காக, 1960,- ல் ஒரு படத்தில் ஒருபாடல் எழுதினேன்.



‘பாடமாட்டேன் - நான்

பாடமாட்டேன்’



என்பது பாடலின் பல்லவி.



ஆம்; அதுதான் அவர் சினிமாவில் கடைசியாகப் பாடிய பாடல். அதற்குப் பிறகு அவர் பாடவே இல்லை.



எனது சொந்தப் படம் ஒன்றில் ஒரு சோகப் பாடல் எழுதினேன்.



‘விடியும் விடியும் என்றிருந்தோம்

முடியும் பொழுதாய் விடிந்ததடா!-

கொடியும் முடியும் தாழ்ந்ததடா நம்

குடியும் குலமும் ஓய்ந்ததடா!”



-எவ்வளவு அறம் நிறைந்த சொற்கள்!

எழுதும்போது எனக்கு அந் உணர்ச்சி தோன்றவில்லை.



ஆனால், அந்தப் படத்தில் விழுந்த அடி, என்னைப் பத்துஆண்டுகள் கலங்க வைத்தது.



அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு ஸ்டூடியோவில்,

அந்த ஸ்டூடியோ கிண்டியில் இருந்தது.



மறுநாளைப் படப்பிடிப்புக்ககாக, அந்த ஸ்டூடியோ நிர்வாகியிடம் பத்தாயிரம் ரூபாய் நான் அச்சாரம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.



மறநாள் நடிகர்களெல்லாம் ஸ்டூடியோவிற்குப் போன பிறகு, அவசரமாக வரும்படி எனக்கு டெலிபன் வந்தது.



நான் போனேன்.



எங்களுக்கு ‘கால்ஷீட்’ கிடையாது என்றும் ஒரு மாய மந்திரப் படத்திற்கு ‘கால்ஷீட்’ கொடுத்து விட்டதாகவும் நிர்வாகி சொன்னார்.



அப்போது இசையமைப்பாளர் விசுவநாதனும் என் கூட இருந்தார்.



எனக்கு ஆத்திரமா வந்தது.



கோபத்தில், அந்த ஸ்டூடியோ நிர்வாகியைத் திட்டிவிட்டு, “உன் ஸ்டூடியோ எரிந்து சாம்பலாகத்தான் போகும்” என்று கூறிவிட்டு, அலுவலகத்திற்கு வந்தேன்.



அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுதான் தாமதம், டெலிபோன் வந்தது.



“ஸ்டூடியோவில் படப்பிடிப்பு மண்டபம் நெருப்புப்பிடித்து எரிகிறது” என்ற என் தயாரிப்பு நிர்வாகி கூறினார்.



அந்த மாய மந்திர செட்டில், சிங்கத்தின் வாயில் நெருப்பு வருவதுபோ படம் பிடித்தார்கள் என்றும், அந்த நெருப்பு மேலேயிருந்த சாக்கிலே பற்றி,மண்டம் எரிகிறது என்னும் அவர் சொன்னார்.



என்குத்தூக்கி வாரிப்போட்டது.



கூட இருந்த தம்பி விசுவநாதன் என் கையைப் பிடித்துக்கொண்டார்.



“அண்ணே, இனி யாரையும் ஏதும் சொல்லாதீர்கள்!” என்று கெஞ்சினார்.



என் சக்தியை உங்களுகுச் சொல்லிப் பயமுறுத்த இவறை நான் சொல்லவில்லை.



“வஞ்சகமிலாத ஆத்மா ஒரு வார்த்தை சொன்னாலும் பலிக்கும்” என்பது இந்துக்கள் நம்பிக்கை.



முனிவர்களின் சாபங்களையும், பத்தினிகளின் சாபங்களையம் நாம் புராணங்களில் படிக்கிறோம்.



நல்லது செய்தால் நல்லது வருகிறது. சொன்னது பலிக்கிறது.



நான் என் உறவினர்களி சிலருக்குத் திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறேன்.



அப்போதெல்லாம்என் குழந்தைகளின் திருமணங்களைப்பற்றி நான சிந்தித்துக்கூடப் பார்த்ததில்லை.



“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என்ற இந்துக்களின் பழமொழிகயில் எனக்கு நம்பிக்கை உண்டு.



என் மூத்த பெண்ணுக்கு அப்போது பதினாறு வயது. திருமணதிற்கு அவசரப்படத் தேவை இல்லாத வயது.



அப்போது ஒரு படத்தில் , ” பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்றொரு பாடல் எழுதினேன்.



அந்தப் படம் வெளியாயிற்று; பாலும் பிரபல மாயிற்று.



ஒருநாள், வீட்டில் அந்த இசைத் தட்டைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என் இளைய சகோதரி வந்தார்கள்.



“ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறது; அலமுவுக்கு கல்யாணம் பேசலாமா?” என்றார்கள்.



“இந்த வயதி என்ன கல்யாணம்?” என்றேன் நான்.



“சுபம் சீக்கிரம் என்பார்கள். பெண் திருமணத்தைச் சீக்கிரம் முடித்துவிடுவது நல்லது” என்றார்க்.

“சரி, பேசுங்கள்” என்றேன்.



கிராமத்துக்குச் சென்ற என் இளைய சகோதரி, எனது ஒன்றுவிட்ட சகோதரியிடம் சொல்லி, “அந்த மாப்பிள்ளையைப் பேச வேண்டும்” என்றார்க்க்.



அதற்கு என் ஒன்றுவிட்ட சகோதரி, “எங்கள் வீட்டில் செய்யக்கூடாதா?” என்று கேட்டுவிட்டு நேரே சென்னைக்குப்புறப்பட்டு வந்துவிட்டார்க்க்.



என் சகோதர்ரும், “அந்தச் சகோதரிவீட்டில்தான் செய்ய வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.



அன்றைக்கே திருமணமும் பேசி முடிந்தது.



அப்போது 1967 தேர்தல் முடிந்த நேரம். தேர்தலில் வாங்கிய அடி; இரண்டு படங்களில் பட்ட கடன் எல்லாம் என்னைப் பின்னி எடுத்த நேரம்.



செட்டி நாட்டுத் திருமணம் என்றால் செலவு எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியும்.



“காலணாக்கூட கையில் இல்லாமல் கல்யாணம் பேசி விட்டோமே!” என்று நான் கலங்கினேன்.



எங்கிருந்தெல்லாம் எனக்க ஆறுதல் வந்தது தெரியுமா?



யாரிடமிருந்தெல்லாம் எனக்கு உதவி வந்தது தெரியுமா?”



நான் எதிர்பாராத இடமெல்லாம் எனக்குக்கை கொடுத்தன.



நான் பிறருக்குத் திருமணம் செய்து வைத்தது வீண் போகவில்லை.



என் மகளின் திருமணத்தைக் கண்ணனே முன்னின்று நடத்தி வைத்துவிட்டா.



திருமண வரவேற்பில் ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற பாடலைச் சௌந்தர்ராஜன் பாடும்போது,



‘கைத்தலம தந்தேன் என் கண்மணி வாழ

கடமை முடிந்தது கல்யாண மாக’



-என்ற என்னுடைய அடிகளே, என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தன.



அப்படியேதான் இரண்டாவது பெண்ணின் திருமணத்தைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை.



“காசி விசாலாட்சி” என்றொரு கதையும் வசனமும் எழுத பெங்களூர் உட்லண்டஸ ஓட்டலில் தங்கியிருந்தேன்.



பாதிவரை எழுதிவிட்டேன்.



கிராமத்திலிருந்து காசிக்குச் சென்ற ஒருதாயும் தகப்பனும் காலராவினால் பாதிக்கப்பட, காசி விசுவநாதரும் விசாலாட்சியுமே தாய்தகப்பனாக வந்திருந்து, ஒரு பெண்ணின் திருமணத்தைப் பேசி முடிக்கிறார்கள்.



அதிலே முடிவாக நான் எழுதிய வசனம், ‘இந்த ஆடி போய் ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்வோம்’ என்பதாகும்.



அதை எழுதி நிறுத்தியபோது சென்னையிலிருந்து டிரங்கால் வந்தது.



“சில பத்திரங்களில் கையெழுத்துப் போட வேண்டும். ஒருநாள் வந்துவிட்டுப் போங்கள்” என்றார்கள்.



நான் வந்தபோது, என் வீட்டிற்குச் சில உறவினர்கள் வந்திருந்தார்கள்.



அவர்கள் “தம்பி நல்ல பையன் இருக்கிறான்; குடும்பமும் சென்னையிலே இருக்கிறது; பேசலாமா?” என்றார்கள்.



பேசினார்கள்; மறுநாள் பெண்பார்க வந்தார்கள்.



“மாலையிலேயே நான் பெங்களூர்போக வேண்டும் ” என்றேன்.



பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள், “நாளைக்கே பேசி முடித்துக் கொள்வோம்; பெங்களூர்ப் பயணத்தை ஒருநாள் ஒத்திப் போடுங்கள்” என்றார்கள்.



திருமணம் பேசி முடிந்து விட்டது.



அப்போதும் பணம் இல்லாத நிலைதான்.



கண்ணன் எனக்கு வழி காட்டினான்.



தேவர் எனக்குக் கைகொடுத்தார்.



கேட பக்கமெல்லாம் உதவி கிடைத்தது.



திருமணம் மங்கலமாக முடிந்துவிட்டது.



“ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று காசி விசுவநாதன் சொல்வதாக நான் வசனத்தில் எழுதினேன். ஆவணியிலேயே திருமணம் நடந்துவிட்டது.



நன்றியுடமை, தெய்வபக்தி, வஞ்சகமற்ற உள்ளம் இவற்றுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்கிறான்.



“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” “நம்பினோர் கெடுவதில்லை,நானகு மறை தீர்ப்பு” என்பதெல்லாம் இந்துக்களில் பழமொழிகள்.



விதையைப்போட்டுவிட்டுக் கனி வராதா என்று நான் ஏங்கி எதிர்பார்த்ததில்லை.



விதைத்துக்கொண்டே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது மரங்கள் பழுத்துக் குலுங்கின.



என்னால் நடத்த முடியாத நற்காரியங்கள் என் வீட்டிலே நடைபெறுமானால், இறைவனைத்தவிர வேறு காரணம் ஏது?



கண்ணனை நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை: